திருகோணமலை கடற்பரப்பில் கடற்றொழிலாளர் சுடப்பட்ட சம்பவம்: அவசர அறிக்கை கோரும் அமைச்சர்
திருகோணமலை கடற்பரப்பில் இடம்பெற்ற சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைக்கு எதிரான ஒரு நடவடிக்கையின் போது, ஒரு கடற்றொழிலாளர் சுடப்பட்டதாக கூறப்படும் வன்முறை மோதல் தொடர்பாக இலங்கை கடற்படையிடமிருந்து உடனடி மற்றும் விரிவான அறிக்கையை இலங்கை கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் கோரியுள்ளார்.
மேலும்ஈ குறித்த கடற்றொழிலாளர் சுடப்பட்ட சம்பவம் தொடர்பாக அமைச்சர் முழுமையான விசாரணைக்கு உடனடியாக அழைப்பு விடுத்துள்ளார்.
அமைச்சர் சந்திரசேகரன், கடற்படையினர் தங்கள் கண்டுபிடிப்புகளை உடனடியாக சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தியுள்ளதாகவும், அறிக்கையின் முடிவுகளின் அடிப்படையில் மேலதிக நடவடிக்கை தீர்மானிக்கப்படும் என்றும் கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
கடற்படை குழு
சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களைக் கைது செய்வதற்காக ஜூன் 3ஆம் திகதி அன்று கடற்படை குழு ஒன்று பணியில் ஈடுபட்டிருந்ததை கடற்படைப் பேச்சாளர் தளபதி புத்திக சம்பத் உறுதிப்படுத்தினார்.
தளபதி சம்பத் கூற்றுப்படி, ஒரு கடற்றொழில் படகு சட்ட நடவடிக்கைகளுக்காக கரைக்கு கொண்டு வரப்பட்டுக் கொண்டிருந்த போது, மேலும் பல படகுகள் கடற்படை படகை அணுகின.
இந்த படகுகளில் இருந்து வந்த நபர்கள் கடற்படை படகில் ஏறி, கடற்படை வீரர்களைத் தாக்கி, தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்களை விடுவிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.
மோதல் தீவிரமடைந்த போது, ஒரு நபர் கடற்படை அதிகாரியிடமிருந்து ஒரு துப்பாக்கியைப் பறிக்க முயன்றதால், ஒரு போராட்டம் ஏற்பட்டதாகவும், அப்போது துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாகவும் கூறப்படுகிறது.
காயமடைந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதுடன் சம்பவத்தில் காயமடைந்த இரண்டு கடற்படை வீரர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது, மேலும் உடனடி மற்றும் முழுமையான விசாரணைக்கான அமைச்சரின் அழைப்பு நிலைமையின் தீவிரத்தன்மையைக் காட்டுவதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |