கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் கூட்டத்தில் விசேட தீர்மானம்
திருகோணமலை மாவட்டத்தில் கடற்றொழில் துறை சார்ந்த பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான சாத்தியமான தீர்வுகள் தொடர்பான மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டம் இடம்பெற்றுள்ளது.
இந்த கூட்டமானது,நேற்று(13.08.2026) திருகோணமலை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம் ஹேமந்த குமாரவின் ஒருங்கிணைப்பில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் இந்த கூட்டம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சருமான அருண் ஹேமச்சந்திரா மற்றும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமன ஆகியோர் கலந்துகொண்டு, மீனவ சமூகம் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்கள் மற்றும் தேவைகள் குறித்துத் தங்கள் கருத்துகளை முன்வைத்துள்ளனர்.
கூட்டத்தின் தொடக்கத்தில், இந்நிகழ்வின் நோக்கம் மற்றும் இதன் மூலம் எதிர்பார்க்கப்படும் பெறுபேறுகள் குறித்து அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் விரிவாக விளக்கமளித்தார்.
இதனைத் தொடர்ந்து, கடந்த மாவட்ட மீன்பிடி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளின் தற்போதைய முன்னேற்றம் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
குறிப்பாக, திருகோணமலை மாவட்ட கடற்றொழிலாளர்கள் அன்றாடம் எதிர்நோக்கும் சிக்கல்களுக்கு விரைவான மற்றும் நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பது குறித்து இக்கூட்டத்தில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.
இந்தக் கூட்டத்தில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர், திருகோணமலை மாவட்ட மீன்பிடி கூட்டுத்தாபன அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், மாவட்ட மீன்பிடி சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.