குறைகேள் பிரிவின் பொறுப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட முதல் பெண் பிரதிப் பொலிஸ் மா அதிபர்
இலங்கையின் முதல் பெண் பிரதிப் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்ட பிம்ஷானி ஜாசீன் ஆராச்சி, பொலிஸ் குறைகேள் பிரிவின் பொறுப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்தப் பொறுப்புக்களிலிருந்து பிம்ஷானி நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 1ம் திகதியிலிருந்து பிம்ஷானி குறித்த பொறுப்புக்களிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2020ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 12ம் திகதி பிம்ஷானி பிரதிப் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்த நியமனத்திற்கு எதிராக 33 சிரேஸ்ட ஆண் பொலிஸ் அத்தியட்சர்கள் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், பொலிஸ் குறைகேள் பிரிவின் பொறுப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டமைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் முனைப்புக்களில் பிம்ஷானி ஈடுபட்டுள்ளார் என ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் பொலிஸ் மா அதிபர் சீ.டி. விக்ரமரட்னவிற்கு பிம்ஷானியின் சட்டத்தரணிகள் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளனர்.
இதேவேளை, இது வழமையான ஓர் பொலிஸ் பதவி நிலை மாற்றம் எனவும் விரைவில் பிம்ஷானிக்கு வேறும் பொறுப்புக்கள் வழங்கப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.