மஸ்கெலியா - மவுசாக்கலையில் தீப்பரவல்! 8 வீடுகள் சேதம்
புதிய இணைப்பு
மஸ்கெலியா தீ விபத்தில் 08 வீடுகளில் இருந்த பெருமளவிலான வீட்டு உபகரணங்கள், பெறுமதியான ஆவணங்கள், தங்க நகைகள், பாடசாலை மாணவர்களின் சீருடைகள் மற்றும் பாடப் புத்தகங்கள் தீக்கிரையாகியுள்ளன.
இந்த தீ விபத்தினால் லயன் தொகுதியில் அமைந்திருந்த 08 வீடுகள் சேதமடைந்ததுடன் இந்த வீடுகளில் குடியிருந்த 08 குடும்பங்களை சேர்ந்த 27 பேர் தற்காலிகமாக தோட்டத்தின் நூலகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான நிவாரண உதவிகளை தோட்ட நிர்வாகமும், கிராம சேவகர் ஊடாகவும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரையும் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கும் மஸ்கெலியா பொலிஸார், அட்டன் பொலிஸ் கைரேகை அடையாளப்பிரிவுடன் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
முதலாம் இணைப்பு
மஸ்கெலியா - மவுசாக்கலை தோட்டப் பகுதியில் உள்ள நெடுங்குடியிருப்பு ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
இந்த நெடுங்குடியிருப்பில் நேற்றிரவு 11.30 அளவில் தீப்பரவல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
12 வீடுகளை கொண்ட இந்த நெடுங்குடியிருப்பில் ஏற்பட்ட தீப்பரவலில் 8 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன.
காரணம்
தோட்ட மக்களும், பொலிஸாரும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீப்பவரலில் எவருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளார்.
தீப்பரவல் ஏற்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் மின்னொழுக்கு காரணமாக தீப்பரவல் ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இதன்போது பாதிப்படைந்த 8 குடும்பங்களைச் சேர்ந்த 21 பேர் தற்காலிக முகாம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

