ரணிலுக்கு வாக்களித்த கறுப்பாடுகளை கண்டுபிடியுங்கள்: அ.அரசரெத்தினம் ஆதங்கம்(Photos)
கடந்த ஜனாதிபதி தேர்தலில் எமது தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து ரணிலுக்கு வாக்களித்ததாக கூறப்படும் கறுப்பாடுகளை உடனடியாக கண்டுபிடியுங்கள் என இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர் அ.அரசரெத்தினம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் காரைதீவில் இடம்பெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களுக்கான கூட்டத்திலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர், எம்.ஏ சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா. சாணக்கியன், த. கலையரசன் மற்றும் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் உட்பட பல்வேறு பிரமுகர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு
இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,“ஜனாதிபதி தெரிவு தொடர்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூட்டத்தில் அனைவரும் அதாவது 10 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஏகமனதாக டலசுக்கு வாக்களிப்பது என்று நீங்கள் முடிவு எடுத்ததாக கூறியிருந்தீர்கள்.
ஆனால் தேர்தலுக்கு பின்னர் ஒருசிலர் ரணிலுக்கு வாக்களித்ததாக தகவல்கள் வெளியாகின. உடனடியாக அவர்களை கண்டுபிடிக்க வேண்டும்.
ஏனெனில் இது தொடர்ந்தால் எதிர்காலத்தில் இரகசியமாக எந்தவிதமான தீர்மானமும் எடுக்க முடியாமல் போய்விடும். இந்திய அரசாங்கம் கூறி ரணிலுக்கு வாக்களித்தது என்று யாராவது கூறினால் நீங்கள் டலசுடன் செய்த ஒப்பந்தம் உபயோகமில்லை.
அது மட்டுமல்ல மற்றுமொறு கேள்வி, கட்சி அனைத்தும் சேர்ந்து டலசுக்குக்கு வாக்களிக்குமாறு நீங்கள் தீர்மானம் எடுத்ததாக கூறினீர்கள். இது கட்சியின் முடிவா? அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களின் முடிவா?
தமிழரசுக் கட்சி
ஏனென்றால் 75 வருட ஜனநாயக அரசியலில் ஈடுபட்ட தமிழரசுக் கட்சி இப்படியான ஒரு தவறான முடிவை எடுத்திருக்கின்றது. அது கட்சியை அவமானத்திற்கு உட்படுத்தி இருக்கிறது என்று தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அப்படியானால் தலைவருக்கு தெரியாமல் இந்த முடிவு எடுக்கப்பட்டதா? தெரியப்படுத்தினால் நன்றாக இருக்கும்”என கேள்வி எழுப்பியுள்ளார்.
சுமந்திரன் கருத்து
இதனை தொடர்ந்து சுமந்திரன் கருத்து தெரிவிக்கையில்,“ஜனாதிபதி தெரிவு தொடர்பாக தமிழரசுக் கட்சி மட்டத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டத்திலும் பல்வேறு கூட்டங்களை நடத்தினோம்.
தமிழரசுக் கட்சி கூட்டங்களுக்கு எல்லாம் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கு அழைப்பு கொடுத்தோம். ஆனால் எரிபொருள் பிரச்சினை காரணமாக மற்றும் சூம் இணைப்பில் இணைந்து கொள்ள முடியாமை காரணமாகவும் அவரது பங்குபற்றுதல் இல்லாமல் இருந்தது.
ஆனால் அனைத்து தீர்மானங்களும் அவருக்கு கூறப்பட்டு வந்த நிலையில், எமது நாடாளுமன்ற உறுப்பினர் 10 பேரில் ஆறு பேர் தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள், மீதி நான்கு பேர் பங்காளி கட்சி உறுப்பினர்களாவர்.
இவர்கள் அனைவரும் ஏகமனதாக இணைந்து டலசுக்கு வாக்களிப்பதாக முடிவு எடுத்தோம். அதன்படியே செயல்பட்டோம். யாராவது மாறி வாக்களித்து இருக்கிறார்கள் என்று நான் கருதவில்லை”என தெரிவித்துள்ளார்.