குருக்கள்மடம் மனிதப்புதைகுழி ஸ்கேனிங் நடவடிக்கையின் இறுதி அறிக்கை குறித்து வெளியான தகவல்
குருக்கள்மடம் மனிதப்புதைகுழி ஸ்கேனிங் நடவடிக்கையின் இறுதி அறிக்கை எதிர்வரும் 22 ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1990 ஆம் ஆண்டில் புனித ஹஜ் யாத்திரை முடித்த பின்னர் கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த முஸ்லிம்கள், ஆயுதத்தாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு தொடர்புடைய வழக்கு விசாணை இன்று(18.05.2026) களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றில் அழைக்கப்பட்டுள்ளது.
ஸ்கேனிங் தொடர்பான விடயங்கள்
அந்த வழக்கில் தொடர்புடையவர்கள் அதன்போது சமூகமளித்திருந்தனர்.
குருக்கள்மடம் மனித புதைக்குழி தொடர்பான வழக்கில் கடந்த 14.05.2026 அன்று மன்றினால் ஆக்கப்பட்ட கட்டளைக்கு அமைவாக கடந்த 15,16,17 ஆம் திகதிகளிலே ராஜ் சோமதேவா தலைமையிலான நிபுணத்துவக் குழுவினால் குறித்த மனித புதைக்குழி அமையப்பெற்றுள்ளதாக நம்பப்படுகின்ற அந்த இடத்திலேயே Magneto telluric audio frequency முறையை பயன்படுத்தி ஸ்கேனிங் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அந்த அடிப்படையிலே ஸ்கேனிங் தொடர்பான விடயங்களை மன்றுக்கு அறிவிப்பதற்கு என இன்றைய தினம் (18.05.2026) குறித்த வழக்கு நீநீதிமன்றத்திலே அழைக்கப்பட்டிருந்தது.
அந்த அடிப்படையில் ஸ்கேனிங் நடவடிக்கைகளின் இறுதி அறிக்கை எதிர்வரும் 22ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படும்.
அதன் பிற்பாடு குறித்த வழக்கு எதிர்வருகின்ற 26 ஆம் திகதி வழக்கு தொடர்பான மேலதிக நடவடிக்கைகளுக்காக திறந்த நீதிமன்றத்திலே அழைக்கப்பட இருக்கின்றது என குறித்த வழக்கின் பிரத்தியட்சக முறைப்பாட்டாளரான ரவூப் அப்துல் மஜீத் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் இதன்போது தெரிவித்துள்ளார்.