FIFA உலக கிண்ணம்: 47 நாடுகளை வீழ்த்திய ஸ்பெயின் - அமெரிக்காவில் சாதனை படைத்த இறுதி நாள் ஆட்டம்
கடந்த சில நாட்களுக்கு முன் நிறைவடைந்த FIFA உலகக் கிண்ணக் கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியை அமெரிக்காவில் மட்டும் சுமார் 6.3 கோடி (63 மில்லியன்) மக்கள் கண்டுகளித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது அமெரிக்காவில் கால்பந்து போட்டி ஒளிபரப்பப்பட்ட வரலாற்று சாதனைகளை முறியடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
உலக கிண்ணத்தை வென்ற ஸ்பெயின்
நியூஜெர்சியில் நடைபெற்ற விறுவிறுப்பான இறுதிப்போட்டியில், கூடுதல் நேரத்தில் ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஆர்ஜென்டினாவை வீழ்த்தி சாம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியது.

ஃபோக்ஸ் ஆங்கில அலைவரிசையில் 3.89 கோடி மக்களும், டெலிமுண்டோ மற்றும் பீகொக் ஸ்பானிஷ் தளங்களில் 2.39 கோடி மக்களும் இந்த போட்டியை கண்டுகளித்துள்ளனர்.
இது 2022 கட்டார் உலகக் கிண்ண இறுதிப்போட்டியை அமெரிக்காவில் பார்த்த பார்வையாளர்களின் எண்ணிக்கையை (2.23 கோடி) விடப் பல மடங்கு அதிகம்.
பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க என்ன காரணம்..
அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்திய இந்த உலகக் கிண்ணத் தொடரில், அமெரிக்க அணி 16ஆவது சுற்றோடு வெளியேறிய போதிலும் அந்நாட்டுப் பார்வையாளர்களின் ஆதரவு குறையவில்லை.
இங்கிலாந்து - மெக்சிகோ அணிகளுக்கு இடையிலான 16ஆவது சுற்றுப் போட்டியை சுமார் 4.5 கோடி மக்கள் கண்டுகளித்துள்ளனர்.

இது அமெரிக்காவின் பிரதான விளையாட்டுத் தொடர்களான “மேஜர் லீக் பேஸ்பால்” மற்றும் “என்பிஏ (NBA) ஃபேனல்ஸ்” இறுதிப்போட்டிகளின் பார்வையாளர்களின் எண்ணிக்கையை விட அதிகம். அமெரிக்காவின் உள்ளூர் நேரத்திற்கு ஏற்ப போட்டிகள் ஒளிபரப்பப்பட்டதும், லியோனல் மெஸ்ஸி மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ போன்ற தலைசிறந்த நட்சத்திரங்களின் கடைசி உலகக் கிண்ணமாக இது இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் பார்வையாளர் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகின்றன.
அமெரிக்காவில் அமெரிக்கன் ஃபுட்பால், கூடைப்பந்து மற்றும் பேஸ்பால் ஆகிய விளையாட்டுகளே ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், பாரம்பரிய கால்பந்து விளையாட்டு அங்கு எந்த அளவிற்குப் பிரபலமடைந்துள்ளது என்பதை இந்த புள்ளிவிவரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.