மகளை கொடூரமாக தாக்கிக் கொன்ற தந்தை கைது
களுத்துறை பகுதியில் மகளை கொடூரமாக தாக்கிப் படுகொலை செய்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
களுத்துறை வடக்கு, போசிறிபுர பகுதியில் நீண்டகாலமாக நிலவி வந்த காணித் தகராறு காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
35 வயதுடைய தனது மகளை இரும்புத் தடியால் அடித்துக் கொலை செய்த குற்றச்சாட்டில் 63 வயதுடைய தந்தை ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், தந்தை நடத்திய கொடூரத் தாக்குதலில் மகள் படுகாயமடைந்து நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். தற்போது சந்தேகநபரான தந்தை பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதோடு, உயிரிழந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக களுத்துறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து களுத்துறை வடக்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.