மாடுகளை திருடும் கும்பலை கட்டுப்படுத்தக் கோரி வேலணையில் போராட்டம்
சட்டவிரோதமாக கால்நடைகளை திருடி இறைச்சியாக்கும் கும்பலை இல்லாதொழிக்க சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்தும் தரப்பினர் முழுமையான பங்களிப்பை வழங்க வேண்டும் எனக் கோரி வேலணையில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தீவகம் தெற்கு கால்நடை வளர்ப்போர் கூட்டுறவு சங்கத்தினரால் குறித்த போராட்டம் இன்று (12.02.2026) முற்பகல் 10 மணியளவில் வேலணையில் நடைபெற்றுள்ளது.
வங்களாவடி சந்தியில் ஆரம்பமான குறித்த போராட்டம் நடைபவனியாக வேலணை பிரதேச செயலகம் வரை, வறிய பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தை அழிக்காதே, சட்ட ஒழுங்கை நடைமுறைப்படுத்த பொலிசாருக்கு துணைநிற்போம், வாழ்வாதாரத்தை பறிக்காதே, ஊர் கூடித் திருட்டை ஒழிப்போம் உள்ளிட்ட பல்வேறு கோசங்களுடன் சென்று பிரதேச செயலர் தனபாலசிங்கம் அகிலனிடம் தமது கோரிக்கை அடங்கிய மனுவினை கையளித்திருந்தனர்.
பால் உற்பத்தி
இது தொடர்பில் போராட்டக்காரர்கள் கூறுகையில் யாழ். மாவட்டத்தின் ஏனைய இடங்களிலும் இந்த மாடு கடத்தல், இறைச்சியாக்கல், பிரச்சினை இருக்கின்றது. ஆனாலும் தீவகத்தில் இது பாரதூரமாக உருவெடுத்துள்ளது.

வேலணை பிரதேசத்தில் 420 இற்கும் மேற்பட்ட பதிவுசெய்யப்பட பண்ணையாளர்கள் இருக்கின்றார்கள். இவர்கள் சுமார் 3000 வரையான நல்ல கறவை மாடுகளை கொண்டு குறித்த பால் உற்பத்தியை முன்னெடுக்கின்றனர்.
இதேநேரம் தீவக மக்களின் நுகர்வை தாண்டி மேலதிகமாக நாளாந்தம் 2000 லீற்றர் பால் தென்னிலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது.
களவாடப்பட்டு இறைச்சியாக்கப்பட்டுகின்றன
அதேபோன்று 4000 வரையான ஆடுகளுகும் இங்கு வளர்க்கப்படுகின்றன அத்துடன் அல்லைப்பிட்டி பகுதியில் இதுவரை 4000 ஆயிரத்துக்கும் அதிகமான மாடுகள் திருட்டுக் கும்பல்களால் களவாடப்பட்டு இறைச்சியாக்கப்பட்டுவிட்டன.
அத்துடன் ஒட்டுமொத்த வேலணையை எடுத்துக்கொண்டால் அது 30 ஆயிரத்தை கடந்துவிட்டது இதில் நல்லின கறவை மாடுகளும் அடங்கும் இதே நேரம் இலங்கையில் 1959 ஆண்டின் 29 ஆம் இலக்கத்தில் கால்படைகளை பாதுகாக்க மிகப்பெரும் சட்டம் இருக்கின்றது.

ஆனால் அது முழுமைதாக நடைமுறையாக வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாக இருக்கின்றது அத்துடன் எமது பிரதேசத்தில் தற்போது நாம் கொடுக்கும் அழுத்தம் காரணமாக பொலிசாரும் அதிகளவான திருடர்களை கைது செய்துள்ளனர். இது வரவேற்கத்தக்க விடயம்.
அந்தவகையில் கால்நடை திருட்டுக் கும்பலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும் சட்டம் ஒழுங்கு தரப்பினருக்கு எமது ஒத்துழைப்பு இருக்கும் என்றும் தெரிவித்தனர்.