மன்னாரில் நெல்லுக்கு உரிய விலையும், விளைச்சலுமின்றி வீதியில் நிற்கும் விவசாயிகள் (Photos)
மன்னார் மாவட்டத்தில் கடந்த வருட இறுதியில் மேற்கொள்ளப்பட்ட காலபோக செய்கையின் அறுவடை தற்போது இடம்பெற்று வருகின்ற நிலையில் ஏக்கருக்கு 30 மூட்டை விளைச்சல் கிடைத்த வயல்களில் இம்முறை 8 -15 மூட்டைகளே விளைச்சல் கிடைத்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக மாந்தை மேற்கு பகுதியில் உள்ள இலுப்பை கடவை, விடத்தல் தீவு, ஆட்காட்டிவெளி கமநல சேவைகள் நிலைய எல்லைக்குள் விவசாய செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் விளைச்சல் இன்மையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு லட்சத்துக்கு மேல் நஷ்டம்
இம்முறை மாந்தை பகுதியை சேர்ந்த 3900 விவசாயிகள் 15,213 ஏக்கர் விவசாய செய்கையில் ஈடுபட்டிருந்த நிலையில் மஞ்சல் நோய் தாக்கம், போதியளவு நீர் உரிய நேரத்தில் கிடைக்காமை, கிருமிநாசினி, கழைநாசினிகளின் விலை அதிகரிப்பு போன்ற காரணங்களால் உரிய விளைச்சல் இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஏக்கருக்கு ஒன்றரை லட்சத்துக்கு மேல் செலவு செய்து விவசாய செய்கை மேற்கொண்ட நிலையில் ஏக்கருக்கு 50.000 ரூபாவிற்கு குறைவான தொகையே கிடைத்துள்ளதாகவும் ஏக்கருக்கு ஒரு லட்சத்துக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
காலநிலை பிரச்சினை, உரிய நேரத்துக்கு பசளை கிடைக்காமை, மருந்து விலை ஏற்றம் என்பவற்றால் இம்முறை கடுமையாக விளைச்சல் குறைவடைந்துள்ளதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் குறிப்பிடுகின்றனர்.
இம்முறை டீசல் விலை அதிகரிப்பு, பசளை விலை அதிகரிப்பு, கிருமி நாசினி விலை அதிகரிப்பு, வெட்டு கூலி அதிகரிப்பு, உழவு கூலி அதிகரிப்பு என அனைத்தும் விலையும் அதிகரித்துள்ளது.
நெல்லின் நிர்ணய விலை
எனினும் நெல்லின் விலை மாத்திரம் அதிகரிக்க படாமலும் நிர்ணயிக்கப்படாமலும் இருப்பதால் விவசாயத்தை விட்டு விட்டு கூலி தொழில் செய்ய வேண்டிய நிலைக்கு தாங்கள் தள்ளப்பட்டுள்ளதாக கோவில் குளம் பகுதியில் விவசாய செய்கை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வருடம் உர பிரச்சனையால் ஏற்பட்ட நட்டத்துக்கே அரசாங்கம் உரிய நஷ்ட ஈடு வழங்காத நிலையில் இம் முறையாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து விவசாயிகளை காப்பாற்ற முன்வரவேண்டும் என மன்னார் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மன்னாரில் உள்ள பிரதேச செயலகங்களினால் நெல் கொள்வனவு இடம் பெற்றாலும் கடுமையான
நிபந்தனைகளின் அடிப்படையில் அவர்கள் நெல்லை கொள்வனவு செய்வதால் விவசாயிகள்,
தனியார் கொள்வனவாளர்களினால் ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்படுகின்ற குறைந்த
விலைக்கே நெல்லை விற்பனை செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலும் தமிழ் அரசியலுக்கு தேவையான கூட்டு முன்னணித் தத்துவமும் 22 நிமிடங்கள் முன்

பாகிஸ்தானுக்கு பெரும் சிக்கல்.... 200 கி.மீ நீள கால்வாய்: தண்டிக்க திட்டமிடும் இந்தியா News Lankasri
