வாகனம் மோதியதில் குடும்பப் பெண் ஸ்தலத்திலேயே பலி
மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பொலிஸ் பிரிவின் கீழுள்ள தாமரைக்கேணி, சவுக்கடி வீதி, நாற்சந்தியில் இடம்பெற்ற வீதி விபத்தில் பிக்கப் வாகனமொன்றினால் மோதுண்டு குடும்பப் பெண்ணொருவர் பலியானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்றுமுன்தினம் (06.12.2025) மாலை இடம்பெற்ற இவ்விபத்தில் ஏறாவூர் மீராகேணி, நேயம் கிராமத்தைச் சேர்ந்த ரீ. சாமிளா (வயது 46) என்ற இரு பிள்ளைகளின் தாயே பலியாகியுள்ளார்,
அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி
சம்பவதினம் பகலுணவுக்காக அவர் சவுக்கடியிலுள்ள தனது தாய் வீட்டுக்குச் சென்று பகலுணவை முடித்து விட்டு பிற்பகல் 04.00 மணியளவில் தனது வசிப்பிடமான நேயம் கிராமத்தை நோக்கி, அவரது சகோதரி மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வர, அவரும் அவரது 10 வயது மகனும் மோட்டார் சைக்கிளின் பின்னே அமர்ந்து பயணித்துக் கொண்டிருந்துள்ளனர்.

அவ்வேளையில், தாமரைக்கேணி நாற்சந்தியை அவர்கள் அடையும்போது, சவுக்கடி கடற்கரை பக்கமாகவிருந்து வேகமாக வந்த பிக்கப் வாகனத்தினால் மோதுண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
அவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த அவரது சகோதரியும் அவரது 10 வயது மகனும் படுகாயமடைந்த நிலையில் இருவரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பலியான பெண்ணின் சடலம் உடற்கூராய்வுப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக, பெண்ணும் அவரது சகோதரியும் மகனும் பயணித்த, மோட்டார் சைக்கிளை மோதிய, பிக்கப் வாகனத்தைக் கைப்பற்றிய ஏறாவூர்ப் பொலிஸார் பிக்கப் வாகன சாரதியைக் கைது செய்துள்ளதோடு மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |