வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம்: அல்லைப்பிட்டியில் பலியான சிறுவனின் தாயார் பரபரப்பு தகவல்!
எமது பிள்ளையைப் பற்றிய தவறான செய்திகளை பரப்புவதால், பிள்ளையை இழந்து வாடும் எங்களுக்கு அந்த செய்திகள் மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்துகின்றன என்று அல்லைப்பிட்டி துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த சிறுவனின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
வவுனியாவில் உள்ள ஒருவரிடம் சம்பவ தினம் நடந்த அன்று, அந்த ஹயஸ் வாகனத்தை வாங்கி இருந்தோம். அன்று இரவு தான் வேலணைக்கு செல்லும் போது, உயிரிழந்த சிறுவனின் சிறிய தந்தையே வாகனத்தை செலுத்தி சென்றார்.
சுட்டுக் கொல்லப்பட்ட சிறுவன்
ஆள் நடமாட்டம் அற்ற வீதியில் வாகனத்தை தான் செலுத்த போவதாக கேட்டதால், வாகனத்தை கொடுத்தார்.
பொலிஸார் மறித்த போது நிற்காமல் ஓடியது மாத்திரமே அவன் செய்த தவறு. அதற்காக அவன் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு அவன் உயிரிழந்து விட்டார். ஆனால் சில ஊடகங்கள் அவன் தொடர்பில் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்.

எமது காணி எல்லையில் நின்ற வேப்ப மரத்தை அயலவர் வெட்டினார். அந்த மரத்தின் விறகுகளில் பாதியை எமக்கு அவர் தந்திருக்க வேண்டும். அதனை அவர் தரவில்லை, அந்த கோபத்தில், மகன் சில விறகுகளை தூக்கி எமது காணிக்குள் போட்டார்.
பொலிஸாரிடம் விசாரணை
இது தொடர்பில், அந்த காணி உரிமையாளர் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார். அதன் பிரகாரம் மகனை அழைத்து விசாரித்தார்கள், அது மாத்திரமே அவனுக்கு எதிரான பொலிஸ் முறைப்பாடு. இது நடந்து கூட சில வருடங்கள் ஆகி விட்டன.
தற்போது மகன் தொடர்பில் ஊடகங்களில் வந்த செய்திகள் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிசாரிடம் விசாரித்தோம்.

அந்தவொரு முறைப்பாட்டை தவிர வேறு எந்த முறைப்பாடும் இல்லை என தெரிவித்துள்ளனர். ஊடகங்களில் வெளிவரும் செய்திகள் தொடர்பில் நாம் சொன்ன போது, ஊடகங்களில் வாற செய்திகளுக்கு நாம் என்ன செய்ய முடியும்? என எம்மிடம் பொலிஸார் திருப்பி கேட்கின்றனர்.
மகனை இழந்து வாடும் எங்களுக்கு மகன் தொடர்பில் வெளிவரும். செய்திகள் மிக வேதனையளிக்கிறது என விசனம் தெரிவித்துள்ளார்.
தாயின் கோரிக்கை
இதே வேளை கருத்து தெரிவித்த தாயார்,
" பொலிஸார் காட்டிய இடத்திலேயே புதைகுழி வெட்டி, எனது மகனின் சடலத்தை புதைத்துள்ளோம். அந்த இடத்தில் கிடங்கு வெட்டிய வேளை தண்ணீர் வந்தது. அந்த இடத்திலேயே புதைத்துள்ளோம்.
எனது மகன் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொண்டது 1.30க்கு என்று செல்லப்படுகிறது. ஆனால் 5.30 மணிக்கே அவரது சடலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஒரிடத்தில் வைத்து துப்பாக்கி சூடு நடாத்தப்பட்டது, ஆனால் வேறொரு இடத்திற்கு சடலம் இழுத்து செல்லப்பட்டு போடப்பட்டது.

எனது மகனோடு சென்ற இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களை சித்திரவதை செய்துள்ளார்கள். அவர்களின் உடற்பகுதியில் அடி காயங்கள் உள்ளன.
கஞ்சா வழக்கு மற்றும் வேறு வழக்குகள் அவர்கள் மீது பதிவு செய்யப்போவதாக மிரட்டியதாக அவர்கள் கூறினார்கள். முதல் சூட்டிலேயே அவர் மயங்கியதாக கூட இருந்தவர்கள் கூறுகின்றார்கள். அதன்பின்னரே ஏனைய துப்பாக்கி சூடுகள் இடம்பெற்றுள்ளன. இது திட்டமிட்ட கொலை.
எனவே இதற்கு ஒரு சரியான முடிவெடுத்து, எனது பிள்ளையை கொலை செய்தவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலதிக தகவல் கஜீந்தன்