காட்டு யானை தாக்கி படுகாயமடைந்த நிலையில் குடும்பஸ்தர் ஒருவர் வைத்தியசாலையில்
மட்டக்களப்பு - படுவாங்கரைப் பகுதியின் போரதீவுப்பற்று பிரதேசத்திற்கு உட்பட்ட திக்கோடை ஐம்பது வீட்டுத்திட்ட பகுதியில் காட்டு யானை தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ள நிலையில் படுகாயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திக்கோடை ஐம்பது வீட்டுத்திட்டத்தில் உள்ள தனது செங்கல் தொழில் செய்யும் இடத்தில் குறித்த நபர் உறங்கி கொண்டிருந்த நிலையில் அதிகாலையில் எழுந்து வெளியில் வந்தபோது திடீரென வந்த காட்டுயானை தாக்கியுள்ளது.
இதனையடுத்து பலத்த காயங்களுக்கும், உபாதைகளுக்கும் உள்ளான நபரை அருகிலிருந்தவர்கள் மீட்டு களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
பின்னர் அவர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் 4 பிள்ளைகளின் தந்தையான 47 வயதுடைய கணபதிப்பிள்ளை சிவப்பிரகாசம் என்பவரே படுகாயமடைந்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாங்கரைப்பகுதியில் மிக நீண்டகாலமாக காட்டு யானைகளின் தொல்லைகளும், அட்டகாசங்களும் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
