4 இலட்சம் ரூபாய் வரை விற்பனையான போலிச் சான்றிதழ்..! 200 பேருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு
கம்பஹா - இம்புல்கொட, ராஜசிங்க பகுதியில் வாடகை வீட்டில் இயங்கி வந்த போலி பட்டச் சான்றிதழ்கள், ஆவணங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ முத்திரைகளைத் தயாரிக்கும் ஒரு பெரிய அச்சகம் ஒன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் போது ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
27 வயது நபர் கைது
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கம்பஹா பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது அம்பாந்தோட்டை - தங்கல்லை பகுதியைச் சேர்ந்த 27 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் முத்திரைகள்
இந்த கும்பல், மாதம் ரூ. 35,000க்கு வாடகைக்கு வீடு ஒன்றை எடுத்து இந்த மோசடி நடவடிக்கையில் ஈடுப்பட்டு வந்துள்ளது. சுற்றிவளைப்பின் போது, 2 மடிக்கணினிகள், 2 ஸ்மார்ட்போன்கள், ஒரு வண்ண அச்சுப்பொறி, 35 போலிச் சான்றிதழ்கள், நிறுவனத் தலைவர்களின் 51 அதிகாரப்பூர்வ முத்திரைகள் மற்றும் 3 புடைப்பு முத்திரைகள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் தலைவர்களின் அதிகாரப்பூர்வ முத்திரைகள் மற்றும் கடிதத் தலைப்புகள் இந்த இடத்தில் தயாரிக்கப்பட்டுள்ளன.
இவற்றில் உள்நாட்டு வருவாய்த் திணைக்களம், இலங்கைத் தேர்வுகள் திணைக்களம், ஒரு தனியார் வங்கி மற்றும் பேராதெனிய, ஸ்ரீ ஜெயவர்தனபுர, களனி, மொரட்டுவ, ருஹுனு, ராஜரட்ட, வயம்ப, ஊவ வெல்லஸ்ஸ உள்ளிட்ட பல அரசாங்க மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் உத்தியோகபூர்வ முத்திரைகளும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
4 இலட்சம் வரை விலைப்போன போலிச் சான்றிதழ்
இந்த மோசடி சுமார் ஒரு வருடமாக இடம்பெற்று வந்த நிலையில், சந்தேக நபர் சாதாரண சான்றிதழ்களை ரூ. 25,000 முதல் 50,000 வரையிலான விலையில் விற்பனை செய்துள்ளார்.

இருப்பினும், ஜப்பான் போன்ற வெளிநாடுகளுக்குத் தேவையான கள்ளச் சான்றிதழ்கள் ரூ.400,000 விலைக்குத் தயாரிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இவ்வாறு தயாரிக்கப்பட்ட கள்ள ஆவணங்களைப் பயன்படுத்தி சுமார் 200பேர் வெளிநாடு சென்றுள்ளதாக சந்தேக நபர் தெரிவித்துள்ளார். யக்கல பொலிஸார், இந்த விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அத்துடன், விசாரணைகள் நிறைவில், சந்தேக நபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
YOU MAY LIKE THIS VIDEO..