சிறுமி துஸ்பிரயோகத்திற்குள்ளான விவகாரம்! பூசகரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு
சிறுமியைக் காதல் வலையில் வீழ்த்தி 3 மாதம் கர்ப்பமாக்கினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கோயில் பூசகரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும் இச்செயலுக்கு உடந்தையாக இருந்த தாய்க்குப் பிணை வழங்கியும் கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அம்பாறை - பெரிய நீலாவணை பகுதி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொடர்மாடி குடியிருப்பில் வசித்து வந்த சிறுமியின் தந்தை கடந்த 26.05.2022 அன்று வழங்கிய முறைப்பாட்டிற்கமைய கல்முனை - சேனைக்குடியிருப்பு பகுதியில் வசிக்கும் 20 வயதுடைய பிரதான சந்தேக நபரான கோயில் பூசாரியும் அவரது தாயும் கைதாகினர்.
நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு
பின்னர் 2022.05.27 வெள்ளிக்கிழமை கல்முனை நீதிவான் நீதிமன்றில் குறித்த இரு சந்தேக நபர்களும் முன்னிறுத்தப்பட்ட நிலையில், சந்தேக நபரான கோயில் பூசாரியை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும் இச்செயலுக்கு உடந்தையான பூசாரியின் தாயை 5 இலட்சம் ரூபா பிணையில் செல்லுமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
பிரதான சந்தேக நபரான பூசாரி பெரியநீலாவணை பகுதியில் உள்ள கோவில் பூஜைக்காகச் சென்று வருவதுடன், தினமும் அப்பகுதி வழியாகச் சென்று வந்துள்ளார்.
இந்நிலையில் அப்பகுதியில் உள்ள தொடர்மாடி குடியிருப்பில் 15 வயதுடைய சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில் பின்னர் தனிக்குடித்தனம் என்ற பெயரில் பூசாரி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று இச்செயலில் ஈடுபட்டுள்ளார்.
இதன்போது பூசாரியின் தாயும் இச்செயலுக்கு உடந்தையாக இருந்துள்ளார் என பொலிஸ் விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது. இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறுமியின் தாய் வெளிநாடு ஒன்றிற்கு பணிப்பெண்ணாகக் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சென்றுள்ள நிலையில், தந்தையார் கடற்தொழிலுக்கு வழக்கமாகச் சென்று வந்துள்ளார்.
இந்நிலையில் தனிமையிலிருந்த சிறுமியின் நிலைமையைப் பயன்படுத்தி சந்தேக நபரான பூசாரி இச்செயலைப் புரிந்துள்ளதாக விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.