மஹிந்தாநந்தவினால் விலக்கப்பட்டவர் கோட்டாபயவுடன் லண்டன் பயணம்
விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தாநந்த அளுத்கமகேவினால்(Mahindananda Aluthgamage) விவசாய அமைச்சின் கீழ் ஆலோசனை பதவிகளிலிருந்து விலக்கப்பட்ட பேராதெனிய பல்கலைக்கழகத்தின் விவசாயப் பீடத்தின் சிரேஸ்ர பேராசிரியர் புத்தி மாரம்பே, ஜனாதிபதி கோட்டாபயவுடன்(Gotapaya Rajapaksa) லண்டன் சென்றுள்ளார்.
லண்டனில் வைத்து அவர் ஆங்கிலச் செய்தித்தாள் ஒன்று செவ்வி ஒன்றையும் வழங்கியுள்ளார்.
ஸ்கொட்லாந்து கிளாஸ்கோவில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாட்டுக்கு இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தலைமையில் குழுவினர் சென்றுள்ளனர்.
முன்னதாக பசளை இறக்குமதி தொடர்பான அவரது நிலைப்பாடு காரணமாக, விவசாய அமைச்சின் கீழ் ஆலோசனை பதவிகளிலிருந்து மாரம்பே கடந்த வாரம் நீக்கப்பட்டதாக அமைச்சின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் இன்னும் அதற்கான அறிவுறுத்தல் அதிகாரப்பூர்வமாக தமக்கு அறிவிக்கப்படவில்லை என்று புத்தி மாரம்பே தெரிவித்துள்ளார்.
இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதைத் தடை செய்யும் அரசாங்கத்தின் கொள்கைக்கு எதிராகவும், முந்தைய கிளைபோசேட் தடையை எதிர்த்ததற்கும் எதிராகப் பல்கலைக்கழக சமூகம், சிவில் சமூகம் மற்றும் பொதுமக்களை அணிதிரட்டியதாகக் குற்றம் சுமத்தியே அவர் விலக்கப்பட்டார்.
இந்தநிலையில் இரசாயனத்திலிருந்து சேதன பசளைகளுக்கு மாறுவதற்கான இந்த
முயற்சியில், அரசாங்கத்தையோ அல்லது அதன் கருத்தையோ தாம், விமர்சிக்கவில்லை.
ஒரு கல்வியாளராக, இந்த விஷயத்தில் ஏதோ தவறு மற்றும் நடைமுறைக்கு மாறானது
என்று உறுதியாக நம்பும் போது 'ஆமாம் சொல்கின்ற மனிதனாக' இருப்பது தமது வேலை
அல்ல என்று புத்தி மாரம்பே குறிப்பிட்டுள்ளார்.