செம்மணி மனிதப் புதைகுழியில் அகழ்வுப் பணிகள் மீள ஆரம்பம்!
செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் நேற்றையதினம் திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றம் 45 நாட்கள் அனுமதி வழங்கியுள்ள நிலையில், கடந்த 06ஆம் திகதி வரையில் 32 நாட்கள் முன்னெடுக்ககப்பட்ட நிலையில், பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டன.
இந்நிலையில் 33ஆவது நாளான இன்றைய தினம் திங்கட்கிழமை மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் ஆரம்பமானது.
அகழ்வு பணிகள்
இன்றைய தினம், ஏற்கனவே இருந்த அகழ்வு தளங்களை மேலும் விரிவாக்கம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாளைய தினமும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளது.
அதேவேளை கடந்த 06ஆம் திகதி வரையில் கட்டம் கட்டமாக,இதுவரை 41 நாட்கள் இடம்பெற்ற அகழ்வில் தடயவியல் அகழ்வாய்வுத் தளம் ஒன்றில் இருந்து 141 மனித என்புத் தொகுதிகளும், தடயவியல் அகழ்வாய்வுத் தளம் இரண்டில் இருந்து 9 மனித என்புத் தொகுதிகளும் என மொத்தமாக 150 மனித என்புத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டு நீதிமன்றக் கட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளன.
இதன்போது ஜி.பி.ஆர்.ஸ்கான் அறிக்கைகளின் பிரகாரம் தடயவியல் அகழ்வாய்வுத் தளம் ஒன்றை விரிவாக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
கடந்த 14 ஆம் திகதி நடைபெற்ற வழக்கு விசாரணைகளின் போது மேலும் அகழ்வு பணிகள் முன்னெடுக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ள நிலையில் பாதீடுகளை தயாரிக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகிறது.
மேலதிக தகவல்:ராகேஷ்








