மன்னாரில் மண் அகழ்வில் ஈடுபட அனுமதி இல்லை! கலந்துரையாடலில் தீர்மானம்
மன்னார் மாவட்ட எல்லை பகுதியில் அரச அனுமதியுடனோ அல்லது அரச அனுமதி இன்றியோ, சட்ட ரீதியாகவோ, சட்ட முரணாகவோ மண் அகழ்வு மேற்கொள்ள அனுமதிக்க போவதில்லை என தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் அவுஸ்ரேலிய நிறுவனம் ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட கனிய மண் ஆய்வு மற்றும் மன்னார் மாவட்டத்தில் குறித்த நிறுவனம் மேற்கொள்ள உள்ள கனிய மண் அகழ்வு தொடர்பாகவும் மண் மற்றும் கனிய வள சுரண்டல்களை சட்ட ரீதியாக அனுகுவது தொடர்பான கலந்துரையாடல் மன்னார் சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமைப்பின் ஏற்பாட்டில் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடலிலே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் கடந்த வருடங்களில் அவுஸ்திரேலிய நிறுவனத்தினால் இடம் பெற்றுள்ள கனிய வள ஆய்வு செயற்பாடு தொடர்பாகவும் அவற்றை கையாள்வதற்கான அனுகு முறைகள் தொடர்பாக கனிய அகழ்வை தடுப்பதற்கான பல்வேறு தெளிவுபடுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன.
குறித்த கலந்துரையாடலில் மன்னார் மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் சூழலியலாளர்கள், பிரஜைகள் குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.



