கலைத்துறையில் மாவட்டத்தில் முதல்நிலை பெற்று சாதனை படைத்த மாணவி பரமசிவம் சுபிலக்ஷி
சட்டத்தரணியாகி தனது கிராமத்திற்கும், பாடசாலைக்கும் பெருமை சேர்ப்பதே தனது இலட்சியம் என வவுனியாவில் கலைப்பிரிவில் முதலிடம் பெற்ற இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவி பரமசிவம் சுபிலக்ஷி தெரிவித்துள்ளார்.
வெளியான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் படி கலைப்பிரிவில் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவி பரமசிவம் சுபிலக்ஷி 3ஏ சித்திகளைப் பெற்று மாவட்ட ரீதியில் முதலிடத்தையும், தேசிய ரீதியில் 351வது இடத்தையும் பிடித்து வவுனியா மண்ணுக்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
அவர் தனது வெற்றி குறித்து கருத்து தெரிவிக்கையில்,
2019ம் ஆண்டு பரீட்சையில் தொற்றவிருந்த நான் உடல் நிலைமை சுகயீனம் காரணமாக 2020ம் ஆண்டு பரீட்சைக்கு தோற்ற வேண்டிய நிலமை ஏற்பட்டது.
எனினும் விடாமுயற்சியினால் தற்போது கலைப்பிரிவில் 3 ஏ சித்திகளை பெற்றுள்ளேன். எனது எதிர்கால இலட்சியம் சட்டத்தரணியாக வேண்டும் என்பது அதன் முதற்கட்டத்தினை தற்போது தாண்டியுள்ளேன் என்பதை நினைக்கும் சமயத்தில் சந்தோசமாகவுள்ளது.
இனி பரீட்சை எழுதவுள்ள மாணவர்களும் இலட்சியத்தினை முன்னிருத்தி கல்வியினை தொடர்ந்தால் சிறந்த பெறுபேற்றினை அடைய முடியும். குறித்த திறமைச்சித்திகளை பெறுவதற்கு காரணமாகவிருந்த இறைவனுக்கு முதற்கண் நன்றிகளை தெரிவித்து கொள்வதுடன், குடும்பத்தினர், அதிபர், ஆசிரியர்கள், உறவினர்கள், சக நண்பர்களுக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன்.
எனது குடும்ப வறுமையின் மத்தியிலும் இந்த சாதனை நிலைநாட்டிய என்னை போல் எதிர்காலத்தில் பரீட்சையில் தோற்றவிருக்கும் மாணவர்களும் வறுமையினை கருத்தில் கொள்ளாது வாழ்க்கையில் முன்னேற வேண்டுமெனவும் தெரிவித்தார்.