நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய உரிமை ரத்து குறித்து ஐ.நாவில் முறைப்பாடு
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய உரிமை ரத்து செய்யப்படுவது குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தற்போதைய அரசாங்கம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய உரிமையை ரத்து செய்ய முயற்சிக்கும் நடவடிக்கைக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கோரப்பட்டுள்ளது.
ஓய்வூதியம் ரத்து
தேசிய மக்கள் சக்தியின் பிரதான பங்குதாரரான ஜே.வி.பி.யின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம், ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிடம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது.
இந்த ஒன்றியத்தின் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரேமசிறி மானகே இது குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.
ஓய்வூதியத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டால், மாகாண சபை உறுப்பினர்கள் முதல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரை, ஜேவிபி அநீதியாக பெற்ற ஊதியங்களை திரும்ப வழங்குமாறு கோர வேண்டிய நிலை ஏற்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுமார் 500 உறுப்பினர்கள் இணைந்துள்ள இந்த ஒன்றியம், மனித உரிமைகள் ஆணையத்திற்கு அனுப்பிய கடிதத்தில், பெரும்பாலான ஓய்வு பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தற்போது வேறு எந்த வருமான மூலமும் இல்லை என சுட்டிக்காட்டியுள்ளது.
சட்ட நடவடிக்கை
ஓய்வு பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம், மன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் ரத்து செய்யப்பட்டால், அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.
பல ஓய்வு பெற்ற உறுப்பினர்கள் தற்போது வயோதிப நிலையில் அல்லது நோயுற்ற நிலையில் உள்ளனர், மேலும் அவர்களுக்கு வேலைவாய்ப்பு அல்லது வணிகத்தில் ஈடுபடுவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை எனவும் ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.
தற்போதைய ஓய்வூதியம் கூட தங்கள் குடும்பத்தின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லாத நிலையில், இந்த ஓய்வூதியத்தை ரத்து செய்வது மிகவும் அநீதியானது என ஓய்வு பெற்ற உறுப்பினர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
புதிய அரசாங்கம், நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ரத்து செய்வதற்கு கவனம் செலுத்தி வருகிறது.




