விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கின் சாட்சியங்கள் பதிவு - விசாரணை ஒத்திவைப்பு
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான சட்டவிரோத சொத்துக்குவிப்பு வழக்கின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் ஜுன் மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
விமல் வீரவன்ச அமைச்சராக கடமையாற்றிய போது சட்ட விரோதமாக 75 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான சொத்துக்களை பெற்றமை தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்று (21) கொழும்பு மேல் நீதிமன்றில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
சாட்சியங்கள் பதிவு
2010 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில், முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தனது வழமையான வருமானத்திற்கு அதிகமாக 75 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான சொத்துக்களை பெற்று இலஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் குற்றமிழைத்ததாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அவருக்கு எதிராக இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தது.

இந்த வழக்கு விசாரணை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹைல் முன்னிலையில் நடைபெற்றது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஆசாத் நவவியின் வழிகாட்டலின் கீழ் சாட்சிகளிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதைத்தொடர்ந்து மேலதிக சாட்சி விசாரணைகள் ஜூன் 8ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.