சௌபாக்கியா விசேட வீடமைப்புத் திட்டத்தின் கீழ் பூரணப்படுத்தப்பட்ட வீடுகளை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் சௌபாக்கியா விசேட வீடமைப்புத் திட்டத்தின் கீழ் பூரணப்படுத்தப்பட்ட வீடுகளை மக்களிடம் கையளிக்கும் நடவடிக்கைகள் மற்றும் அடிக்கல் நாட்டும் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
அந்தவகையில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் சமுர்த்தி சௌபாக்கிய விசேட வீடமைப்புத் திட்டத்தின் மூலம் கட்டப்பட்ட வீடுகளை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது.
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் வி.தவராஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சமுர்த்தி தலைமையக முகாமையாளர் எம்.ஐ.ஏ.அஸீஸ், சமுர்த்தி சமுக உத்தியோகத்தர் எம்.எம்.எம்.சாஜகான், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் எம்.என்.சியாத், ஏ.எல்.எம்.நியாஸ், கிராம சேவை அதிகாரிகள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் காகிதநகர் பகுதியில் நான்கு வீடுகளும், மாஞ்சோலை பிரதேசத்தில் மூன்று வீடுகளுமாக ஏழு வீடுகள் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் இரண்டு இலட்சம் ரூபாய் நிதி உதவியும், மக்களின் இரண்டு இலட்சம் ரூபாய் பங்களிப்பு மூலம் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் மக்களின் பாவனைக்குக் கையளிக்கப்பட்டதாக ஓட்டமாவடி பிரதேச செயலாளர் வி.தவராஜா தெரிவித்துள்ளார்.








