நிசங்க சேனாதிபதிக்கு சட்டக்கோரிக்கை கடிதத்தை அனுப்பியுள்ள தில்ருக்ஷி விக்கிரமசிங்க
இலங்கையின் முன்னாள் மன்றாடியார் நாயகம் தில்ருக்ஷி டயஸ் விக்கிரமசிங்கவுக்கும் எவன்ட் கார்ட் தலைவர் நிசங்க சேனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடல் அடங்கிய குரல் பதிவு, திருத்தியமைக்கப்பட்ட ஒன்று என மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.
2019 செப்டம்பரில் யூடியூப்பில் பதிவேற்றப்பட்டு ஊடகங்களில் ஒளிபரப்பப்பட்டதாகக் கூறப்படும், குறித்த உரையாடலைத் தொடர்ந்து பொதுச் சேவை ஆணைகுழு, தில்ருக்ஷி விக்கிரமசிங்கவை பதவியில் இருந்து இடைநீக்கம் செய்து கட்டாய விடுப்பில் அனுப்பியது.
இந்த நிலையில் தனது உத்தரவை பொதுச் சேவைகள் ஆணைக்குழு, ரத்து செய்யுமாறும், தில்ருக்ஷி விக்கிரமசிங்கவை உடனடியாக மன்றாடியார் நாயகம் பதவியை தொடர்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
எனினும், தில்ருக்ஷி விக்கிரமசிங்க தனது ஓய்வு பெறும் வயதை அடைந்தநிலையில் கடந்த வெள்ளிக்கிழமை, (ஜூலை 30) அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் அறிக்கை உட்பட மூன்று நிபுணர்களின் அறிக்கைகள் கூறப்பட்ட பதிவு கணிசமாக, திருத்தப்பட்ட அடிப்படையில் வெளியிடப்பட்டமையை உறுதி செய்துள்ளது.
அரச உதவி ஆய்வாளர் டபிள்யூ.ஜி.டி.எல். குணதிலகவின் தகவல்படி, தில்ருக்ஷி விக்கிரமசிங்கவுக்கு எதிரான, குறித்த குரல் பதிவு 10 இடங்களில் திருத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிசங்க சேனாதிபதி ஆரம்ப விசாரணையின் போது, குறித்த குரல் பதிவு அவரால் திருத்தப்பட்டதாக ஒப்புக்கொண்டார்.
அத்துடன் திருத்தப்படாத செய்யாத குரல் பதிவை வழங்க அவர் உறுதிமொழி கொடுத்திருந்தாலும், அதை நிறைவேற்ற தவறிவிட்டார் என்று தீர்ப்பாயம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்கிடையில், தில்ருக்ஷி விக்கிரமசிங்க, நிசங்க சேனாதிபதிக்கு ஒரு சட்டக் கோரிக்கை கடிதத்தை அனுப்பியுள்ளார்.
அதில், அவரால் வெளியிடப்பட்ட மற்றும் பரப்பப்பட்டதாகக் கூறப்படும் குரல் மற்றும் காணொளி மூலம் தனக்கு ஏற்பட்ட இழப்பு மற்றும் சேதத்திற்கு 2 பில்லியன் ரூபாவை உடனடி நட்டஈடாக செலுத்த வேண்டும் என அவர் கோரியுள்ளார்.