ஏறாவூர் நகரசபையின் வரவு செலவுத் திட்டம் ஏகமானதாக நிறைவேற்றம் (Photos)
ஏறாவூர் நகர சபையின் தலைவரால் சமர்ப்பிக்கப்பட்ட 2022ஆம் ஆண்டுக்கான சுமார் 164 மில்லியன் ரூபாவுக்குரிய வரவு செலவுத் திட்டம் எதிர்ப்பின்றி ஏகமானதாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக நகர சபைச் செயலாளர் எம்.ஆர் சியாஹல்ஹக் தெரிவித்துள்ளார்.
அச்சபையின் விசேட சபைக் கூட்டமும் பாதீடு சமர்ப்பிப்பும் இன்று நகர சபைத் தலைவர் எம்.எஸ். நழிம் தலைமையில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் ஏறாவூர் நகர சபையின் மொத்தமுள்ள அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் 17 பேரில் 14 பேர் கலந்து கொண்டிருந்தனர்.
அத்துடன் நகர சபையின் கணக்காளர் ஆர்.எப். புஸ்ரா உட்படச் சபையின் விடய தானத்திற்குரிய அலுவலர்களும் பிரசன்னமாகியிருந்தனர். இது புதிய தலைவரின் இரண்டாவது பாதீடு சமர்ப்பித்தலாக அமைந்திருந்தது.
சபையின் சொந்த வருமானம் அத்துடன் அரச துறைகளுக்கூடாக கிடைக்கின்ற மானியங்கள் ஒதுக்கீடுகள் உள்ளடங்கலாக சுமார் 164 மில்லியன் ரூபாவுக்கான பாதீடு சபைத் தலைவரால் சமர்ப்பிக்கப்பட்டது.
ஏறாவூர் நகர சபையில் முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, இலங்கை தமிழரசுக் கட்சி, ஐக்கிய சமாதான கூட்டமைப்பு,
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, சுயேட்சை குழு ஆகியவற்றின் உறுப்பினர்கள்
முறையே 5, 4, 3, 2, 1, 1, 1 என்ற அடிப்படையில் ஆசனங்களைப் பெற்றுள்ளனர் என்பது இங்கு
குறிப்பிடத்தக்கது.


