எப்ஸ்டீன் விவகாரம்: பிரபல முதலீட்டு வங்கி நிறுவனத்தின் தலைமை சட்டத்தரணி பதவி விலகல்
பிரபல முதலீட்டு வங்கியான கோல்ட்மேன் சாக்ஸ் (Goldman Sachs) நிறுவனத்தின் உயர்மட்ட சட்டத்தரணியான கேத்தி ரூம்லர் (Kathy Ruemmler), பாலியல் குற்றவாளியான மறைந்த தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீனுடனான தொடர்புகள் வெளிச்சத்திற்கு வந்ததை அடுத்து தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
அமெரிக்க நீதித்துறை சமீபத்தில் வெளியிட்ட விசாரணை கோப்புகளில், ரூம்லர் எப்ஸ்டீனிடமிருந்து பரிசுகளைப் பெற்றதும், அவருக்கு நற்பெயர் மேலாண்மை குறித்த ஆலோசனைகளை வழங்கியதும் தெரியவந்துள்ளது.
எப்ஸ்டீன் இடையேயான தொடர்புகள்
மேலும், எப்ஸ்டீனை அவர் தனது சொந்த சகோதரர் போல கருதுவதாகக் குறிப்பிட்டிருந்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 2019இல் சிறையில் உயிரிழந்த எப்ஸ்டீனுடனான இந்த நெருக்கம் வங்கியின் பெயருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், ரூம்லர் வரும் ஜூன் மாத இறுதியில் தனது பதவியிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளார்.

இந்த விவகாரம் சர்வதேச அளவில் பல முக்கிய தலைவர்களையும் நெருக்கடியில் ஆழ்த்தியுள்ளது.
பிரித்தானியாவில், முன்னாள் தூதுவர் பீட்டர் மண்டல்சன் மற்றும் எப்ஸ்டீன் இடையேயான தொடர்புகள் குறித்து பொலிஸ் விசாரணை தொடங்கியுள்ள நிலையில், சர்ச்சைகளைக் குறைக்கும் முயற்சியாக அந்நாட்டு அமைச்சரவைச் செயலாளர் கிறிஸ் வார்மால்ட் தனது பதவி விலகலை அறிவித்துள்ளார்.
அதிரடி சோதனை
அதேபோல் நோர்வேயிலும், முன்னாள் பிரதமர் தோர்ப்ஜோர்ன் ஜாக்லாண்ட் எப்ஸ்டீனுடன் கொண்டிருந்த தொடர்புகள் தொடர்பாக அந்நாட்டு பொலிஸ் அவரது சொத்துக்களில் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.

செல்வாக்கு மிக்க பல முக்கிய பிரமுகர்கள் எப்ஸ்டீன் வழக்கில் தொடர்ந்து சட்டச் சிக்கல்களையும் பதவி இழப்புகளையும் சந்தித்து வருவது உலக அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவில் தீப்பற்றிய வீட்டுக்குள் சிக்கிய இளம்பெண்: அவரது கடைசி வார்த்தைகளை எண்ணிக் கலங்கும் குடும்பம் News Lankasri
உள்நாட்டில் கடும் நெருக்கடி... இந்தியாவில் செயல்படத் தொடங்கிய பிரித்தானியப் பல்கலைக்கழகங்கள் News Lankasri