விவசாய காணிகளில் கிரவல் அகழ்வு தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்ட நிலையில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி
வவுனியா - ஓமந்தை பகுதியில் நீண்ட காலமாக விவசாயம் செய்யப்பட்ட காணிகளில் கிரவல் அகழப்பட்டு வருவதாகவும், அங்கிருந்த மரங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் புகைப்பட ஆதாரங்களுடன் பொதுமகன் ஒருவர் வவுனியா பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தின் போது சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்போது குறித்த நபர் மேலும் கூறுகையில், தாம் நீண்ட காலமாக விவசாயம் செய்த காணிகள் யுத்தம் காரணமாகக் கைவிட்டுச் சென்றிருந்தோம்.
எனினும் தற்போது நாம் அங்கு குடியேறி விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்ற போதிலும் அதற்கு அனுமதி மறுத்து கிரவல் அகழும் செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது.
அங்கிருந்த பாரிய மரங்கள் அழிக்கப்படுகின்றன. எனவே குறித்த காணிகளில் சிலவற்றுக்கு காணி அனுமதிப்பத்திரம் எமக்கு இல்லாத நிலையில் இவ்வாறான செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது.
எனவே சுமார் 100 ஏக்கர் காணியைக் காப்பாற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இதன்போது பிரதேச செயலாளர், 45 ஏக்கர் காணியில் இவ்வாறான செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது. இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்போது குறுக்கிட்ட வவுனியா தெற்கு பிரதேச சபையின் தலைவர் குற்றம்சாட்டுபவர் முன்பு கிரவல் வெட்டியவர் என குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு குறித்த பொதுமகன் தான் எந்த சட்டவிரோத செயற்பாட்டிலும் ஈடுபடவில்லை எனத் தெரிவித்ததுடன் அங்கு தற்போது இடம்பெறும் சட்டவிரோத செயற்பாட்டையே நிறுத்துமாறு கூறுவதாகத் தெரிவித்துள்ளார்.
இறுதியில் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கு. திலீபன் குறித்த நடவடிக்கை தொடர்பில் அதிகாரிகள் சகிதம் அங்கு வந்து நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.


குறைந்த விலையில் கிடைக்கும் இந்த மீனை கட்டாயம் சாப்பிடுங்க.... முடி வளர்ச்சி முதல் இதய நோய் வரை தீர்வு Manithan