எலோன் மஸ்க் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு
பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க், முதலீட்டாளர்களை ஏமாற்றியதாக கலிபோர்னியா மத்திய நீதிமன்ற ஜூரிகள் தீர்ப்பளித்துள்ளனர்.
ட்விட்டர் (தற்போது X) நிறுவனத்தை 44 பில்லியன் டாலருக்கு கொள்வனவு செய்வதற்கு முன்னர், அதன் பங்குகளை வேண்டுமென்றே வீழ்ச்சியடையச் செய்தார் என மஸ்க் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தத் தீர்ப்பின் காரணமாக, உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் பல பில்லியன் டாலர்களை இழப்பீடாக வழங்க வேண்டிய நிலை ஏற்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

2022 ஆம் ஆண்டு மே மாதம் எலான் மஸ்க் பதிவிட்ட இரண்டு ட்வீட்கள் (பதிவுகள்) தவறான தகவல்களைக் கொண்டிருந்ததாகவும், அதன் விளைவாக ட்விட்டர் நிறுவனத்தின் பங்கு விலை கடுமையாக சரிந்ததாகவும் சான் பிரான்சிஸ்கோ நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தெரிவிக்கப்பட்டது.
2022 மே பாதியிலிருந்து அக்டோபர் தொடக்கம் வரை ட்விட்டர் பங்குகளை விற்பனை செய்த முதலீட்டாளர்கள் சார்பில் ஜுசெப் பம்பெனா என்ற முதலீட்டாளர் இந்த கூட்டுப் பிர்சினை வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
எலான் மஸ்க் விதிகளை மீறி, தவறான தகவல்களைப் பரப்பி பங்குச் சந்தையில் முறைகேடு செய்ததாக ஜூரிகள் ஒருமனதாக ஒப்புக்கொண்டனர்.
வாதிகள் தரப்பு வழக்கறிஞர்களின் மதிப்பீட்டின்படி, இந்த இழப்பீட்டுத் தொகை சுமார் 2.6 பில்லியன் டாலர்களாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், , எலான் மஸ்க் முதலீட்டாளர்களை ஏமாற்ற 'சதித் திட்டம்' (Scheme) தீட்டவில்லை என்று கூறி, சில மோசடி குற்றச்சாட்டுகளில் இருந்து ஜூரிகள் அவரை விடுவித்துள்ளனர்.
தீர்ப்பு வெளியான சில நிமிடங்களிலேயே, எலான் மஸ்க் தரப்பு வழக்கறிஞர்கள் இதனை ஒரு தற்காலிகப் பின்னடைவு எனக் குறிப்பிட்டு, இத்தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளனர்.
தற்போது எலான் மஸ்க்கின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 839 பில்லியன் டாலர்கள் என ஃபோர்ப்ஸ் (Forbes) இதழ் மதிப்பிட்டுள்ளது.