உக்ரைன் மீதான ரஷ்யா தாக்குதல்! எலான் மஸ்க் எடுத்த நடவடிக்கைகள்
உக்ரைன் மீதான தாக்குதல்களுக்கு ரஷ்யா 'ஸ்டார்லிங்க்' இணைய சேவையைப் பயன்படுத்துவதைத் தடுக்க எலான் மஸ்க் எடுத்த நடவடிக்கைகள் "உண்மையான பலனைத் தந்துள்ளதாக" உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரஷ்யா தனது ஆளில்லா விமானங்களில் ஸ்டார்லிங்க் முனையங்களைப் பொருத்தி, அதன் மூலம் துல்லியமான தாக்குதல்களை நடத்தி வந்தது.
இது குறித்து உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் மைக்கைலோ ஃபெடோரோவ் , எலான் மஸ்க்கிடம் முறையிட்டதைத் தொடர்ந்து, ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனம் உடனடியாகச் செயல்பட்டு இந்தத் துஷ்பிரயோகத்தைத் தடுத்துள்ளது.
ஸ்டார்லிங்க் இணைய சேவை
ரஷ்யாவின் 'மோல்னியா-2' போன்ற அதிவேக ட்ரோன்களைக் கட்டுப்படுத்த ஸ்டார்லிங்க் இணையம் பெரிதும் உதவியது. இதைத் தடுக்க, உக்ரைன் வான்பரப்பில் 75 கி.மீ வேகத்திற்கு மேல் செல்லும் ஸ்டார்லிங்க் முனையங்களின் இணைய வேகத்தைச் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனம் கட்டுப்படுத்தியுள்ளது.

ரஷ்ய ட்ரோன்கள் பொதுவாக இந்த வேகத்தை விட வேகமாகச் செல்வதால், அவற்றைத் தொலைதூரத்தில் இருந்து இயக்குவது இனி சாத்தியமில்லை.
இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட எலான் மஸ்க், "ரஷ்யாவின் அத்துமீறிய பயன்பாட்டைத் தடுக்க நாங்கள் எடுத்த நடவடிக்கைகள் பலன் அளித்துள்ளன; இன்னும் தேவைப்பட்டால் சொல்லுங்கள்," என்று குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் அரசு
மேலும், உக்ரைன் அரசு ஒரு 'வெள்ளைப்பட்டியல் முறையை அறிமுகப்படுத்த உள்ளது. இதன்மூலம் பதிவுசெய்யப்பட்ட அதிகாரப்பூர்வ ஸ்டார்லிங்க் முனையங்கள் மட்டுமே உக்ரைனில் இயங்க முடியும்.

2022ல் போர் தொடங்கியபோது உக்ரைனுக்கு ஆதரவாக ஸ்டார்லிங்க் சேவையை வழங்கிய மஸ்க், தற்போது ரஷ்யாவின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தியதற்காக "உக்ரைன் மக்களின் உண்மையான நண்பன்" எனப் புகழப்படுகிறார்.
அதே வேளையில், இந்தத் தொழில்நுட்பம் தாக்குதலுக்காக அல்லாமல் தற்காப்பிற்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்பதில் மஸ்க் உறுதியாக உள்ளார்.