கிளிநொச்சி - கல்மடு பிரதேசத்தில் யானை உயிரிழந்த சம்பவம்! ஒருவர் கைது
கிளிநொச்சி - கல்மடு பிரதேசத்தில் யானை உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபரெருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரவு நேரத்தில் குறித்த பகுதிக்கு வந்த காட்டு யானை வயலை அழித்துள்ள நிலையில், அப்பகுதியிலேயே உயிரிழந்துள்ளது.
இன்று காலை வயல் நிலத்தைப் பார்வையிடச் சென்ற பொது மக்கள் யானை உயிரிழந்திருப்பது தொடர்பில் கிராம சேவையாளர் ஊடாக வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
உயிரிழந்த யானை தந்தத்துடன் காணப்படுவதுடன் குறித்த பகுதி அடர் காட்டினை அண்மித்த பகுதி என்பதும் குறிப்பிடத்தக்கது.
யானை உயிரிழந்தமை தொடர்பான மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிஸாரும், வனஜீவராசிகள் திணைக்களமும் மேற்கொண்டு வந்தனர்.
குறித்த யானை சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின் இணைப்பில் சிக்கி உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் கல்மடு பகுதியைச் சேர்ந்த ஒருவரை வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.

