இலங்கை அரசியல் அரங்கில் மிக உக்கிரமான போரை உருவாக்கவுள்ள தேர்தல்: அனுரகுமார சூளுரை
நாட்டில் நடைபெறவிருக்கும் தேர்தல்கள், இலங்கை அரசியல் அரங்கில்
முன்னெப்போதும் இல்லாத வகையில் மிக உக்கிரமான போரை உருவாக்கும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பேசிய அவர், தற்போது உருவாகியுள்ள அரசியல் முகாம்களும், அரசியல் பிளவுகளும் சாதாரணமானவை அல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், வருகின்ற தேர்தல்கள் தேசிய மக்கள் சக்திக்கு, செய் அல்லது மடி என்ற சவாலாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய அபிலாசைகள்
இம்முறை அரசியல் போரில் தேசிய மக்கள் சக்தி தோல்வியுற்றால், அது நாட்டையும் மக்களையும் மேலும் துயரத்திற்கு இட்டுச் செல்லும்.
எனினும் தேசிய மக்கள் சக்தியின் வெற்றி நாட்டை புதிய அபிலாஷைகளுடன் ஒரு பாதையில் வழிநடத்தும் என்றும் திஸாநாயக்க கூறியுள்ளார்.
புதிய பொருளாதார சித்தாந்தம்
தொடர்ந்து, நீண்டகாலமாக அரசாங்கங்கள் கடைப்பிடித்து வரும் தோல்வியடைந்த பொருளாதார மற்றும் அரசியல் கொள்கைகளுக்கு எதிராக புதிய பொருளாதாரப் பயணத்தை உருவாக்கும் சித்தாந்தத்தை தேசிய மக்கள் சக்தி விவாதிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அரச சொத்துக்களை விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கான திட்டங்களை அரசாங்கம் வகுத்து வருவதாக அனுரகுமார குற்றம் சுமத்தியுள்ளார்.
எனவே, சமூகக் குற்றங்களை எதிர்த்துப் போராடவும், ஊழல் நிறைந்த அரசியல் கலாசாரத்தை மாற்றவும், அதன் மூலம் நாட்டில் புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்கவும் திட்டங்களை ஆலோசித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |