சர்வஜன வாக்கெடுப்பை கடந்து செல்ல திட்டம் தீட்டும் அரசாங்கம்: சாடுகிறார் அனுர
சர்வஜன வாக்கெடுப்புக்கு முகம் கொடுக்காமல் ஜனாதிபதி தேர்தலை கடந்து செல்லும் முயற்சி இடம்பெற்று வருவதாக தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட உறுப்பினர் அனுர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்றையதினம்(18.07.2023) உரையாற்றுகையிலேயே இதனை தெரிவித்துள்ளார்.
இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“இந்த நடவடிக்கையானது தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்ட சுதந்திரத்தை நாடாளுமன்ற அதிகாரத்தை பயன்படுத்தி துஷ்பிரயோகம் செய்யும் ஒரு செயற்பாடாக கருதப்படுகிறது.
நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்ட பிரேரணை
மேலும், நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்ட பிரேரணையானது தேர்தல்கள் ஆணைக்குழுவினால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை மீறும் செயலாகும்.
இந்த நாட்டின் தேர்தல் வரலாறு மிகவும் இருண்ட மற்றும் மோசமான வரலாற்றைக் கொண்டுள்ளது. நாட்டில் தேர்தலை சுயாதீனமாக நடத்துவதற்காகவே தேர்தல்கள் ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தேர்தல்களை நடத்துவது தொடர்பாக தேவையான அனைத்து ஒழுங்குமுறை நடவடிக்கைகளும் மேற்கொள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரமாக வழங்கப்பட்டுள்ளது.
அதனை தெரிவுக்குழுவின் ஊடாக விசாரணை செய்வது ஜனநாயகப் பணியல்ல.
மேலும், சர்வஜன வாக்கெடுப்புக்கு முகம் கொடுக்காமல் ஜனாதிபதி தேர்தலை கடந்து செல்லும் முயற்சி இடம்பெற்று வருகிறது.
இவ்வாறான கோரிக்கைகளை கருத்தில்கொண்டு தேர்தல் ஆணைக்குழுவை நாடாளுமன்றத்திற்கு அழைக்கும் முயற்சி நிறுத்தப்பட வேண்டும். "என அனுர திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |