புதிய பிரதமரையும் நாடாளுமன்றத்தையும் தெரிவு செய்ய வேண்டும்
21வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் ஊடாக புதிய அதிகாரங்கள் பிரதமருக்கும் நாடாளுமன்றத்திற்கும் கிடைக்கும் என்பதால், புதிய பிரதமர் மற்றும் நாடாளுமன்றத்தை தெரிவு செய்ய வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் இன்று முற்பகல் நடைபெற்ற செய்தியளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
இந்த புதிய அதிகாரங்களை பெற்றுக்கொள்ளும் உரிமை நாடாளுமன்றத்தில் உள்ள எந்த உறுப்பினருக்கும் கிடையாது.
கோட்டாபய பதவியில் இருக்க உரிமை உள்ளது
ஜனாதிபதி தொடர்பில் எமக்கு எப்படியான குறைப்பாடுகள்,விமர்சனங்கள் இருந்தாலும் அவர் அந்த பதவிக்கு தகுதியற்றவர் என அவரே நிரூபித்து உறுதிப்படுத்தி இருந்தாலும் மக்கள் ஆணைக்கு அமைய அவர் அந்த பதவியை வகிக்க உரிமையுள்ளது.
எனினும் 21வது திருத்தச் சட்டம் ஊடாக ஜனாதிபதியின் அதிகாரங்களில் குறிப்பிடத்தக்க அதிகாரங்கள் பிரதமருக்கு கிடைக்கும்.
அதிகாரங்களை பெறும் தகுதி ரணிலுக்கு இல்லை
ஆனால், தற்போதைய பிரதமருக்கோ, நாடாளுமன்றத்தில் வேறு எவரை பிரதமராக தெரிவு செய்தாலோ, அவருக்கு இந்த அதிகாரங்களை பெற்றுக்கொள்ளும் தகுதியில்லை. விசேட அதிகாரம் உள்ள பதவி என்பதே இதற்கு காரணம்.
21வது திருத்தச் சட்டத்தின் ஊடாக புதிய அதிகாரங்கள் பிரதமருக்கும், நாடாளுமன்றத்திற்கும் கிடைக்கும் என்பதால், புதிய அதிகாரங்களை நடைமுறைப்படுத்த இவர்களுக்கு உரிமையில்லை.
இதனால், புதிய நாடாளுமன்றத்தையும் பிரதமரையும் தெரிவு செய்ய சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும். அப்போது இந்த அதிகாரங்களுக்காகவே நாடாளுமன்றத்தையும் பிரதமரையும் தெரிவு செய்கிறோம் என்பதை மக்கள் அறிவார்கள்.
நாடாளுமன்றத்திற்கும் தெரிவு செய்யப்படாத ஒருவர் (ரணில்) புதிய அதிகாரங்களை பெற்று பிரதமராக பதவி வகிப்பது நீதியானது அல்ல.
தற்போதைய நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பான பிரச்சினை ஏற்படும் என்பதால், தற்போதைய 9வது நாடாளுமன்றம் இதுவரை காலம் மட்டுமே பதவியில் இருக்கும் என்ற ஷரத்தை 21வது திருத்தச் சட்டத்தில் உள்ளடக்க வேண்டும் எனவும் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.