நாளை என்ன நடக்கும் என்று தெரியாது: மின் சக்தி அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவித்தல்
நாட்டில் தற்போது மின்சாரம் துண்டிக்கப்படாது என்றாலும் நாளை அல்லது நாளை மறுநாள் என்ன நடக்கும் என்பதை கூற தெரியவில்லை என மின் சக்தி அமைச்சர் காமினி லொக்குகே(Gamini Lokuge)தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்(SLPP) தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
அவசரமாக பிரச்சினை ஏற்பட்டதால், அதனை சமாளிக்க மின்சார சபை திட்டங்களை உருவாக்கியுள்ளது. நேற்றும், நேற்று முன்தினமும் மின்சாரம் துண்டிக்கப்படும் எனக் கூறப்பட்டது. எனினும் ஒரு மணி நேரம் கூட துண்டிக்கப்படவில்லை.
அவசரமாக ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால், எப்படி செயற்படுவது என்பது தொடர்பில் மின்சார சபை திட்டம் ஒன்றை வகுத்துள்ளது. தற்சமயம் வரை நாட்டு மக்களுக்கு மின்சாரத்தை வழங்குவதில் எமக்கு எந்த சிக்கலும் ஏற்படவில்லை என்பதை கூற வேண்டும்.
மின்சார துண்டிப்பு வரப் போகிறது இன்று பல பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன. அப்படியான மின் துண்டிப்பை நாங்கள் அறிவிக்கவில்லை. மக்களுக்கு அறிவித்த பின்னரே நாங்கள் அப்படியான ஒன்றை செய்வோம்.
அதனை விடுத்து, பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்கத் தலைவர்கள் அதிகாலையில் எழுந்து எரிபொருள் விநியோகிக்கப்பட மாட்டாது. எண்ணெய் கிடைக்காது என்று கூறுகின்றனர். எரிபொருள் கிடைப்பதில் எந்த குறைவும் ஏற்படவில்லை.
எது எப்படி இருந்த போதிலும் தற்போதைக்கு மின் துண்டிப்பு நடக்காது எனவும் காமினி லொக்குகே குறிப்பிட்டுள்ளார்.