பொகவந்தலாவ பகுதியில் எட்டு பேருக்கு தொற்று உறுதி! சுயதனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைப்பு
பொகவந்தலாவ பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பகுதியில் மேலும் எட்டு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர்கள் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை, கம்புறுகம சுயதனிமை நிலையத்திற்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் இதுவரையில் 55 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக பொகவந்தலாவ பொதுச் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 23ஆம் திகதி மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கை நேற்று மாலை கிடைக்கப் பெற்ற நிலையிலேயே கொழும்பிலிருந்து வந்தவர்கள் மற்றும் வட்டவளை ஆடைத்தொழிற்சாலையில் வேலை செய்பவர்கள் என 8 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வட்டவளை ஆடைத்தொழிற்சாலையின் பணிபுரியும் இன்வெறி, போற்றி தோட்டத்தைச் சேர்ந்த இருவரும், ஏற்கனவே தொற்றுக்குள்ளான வட்டவளை ஆடைத் தொழிற்சாலையில் பணி புரியும் இன்ஜஸ்ரீ தோட்டம் பீரட் பிரிவைச் சேர்ந்த பெண்ணின் தாய், சகோதரன் மற்றும் சகோதரி என மூவரும், கேர்கசோல்ட் நடுப்பிரிவை சேர்ந்த இருவர் மற்றும் என்பீல்ட் தோட்டத்தில் ஒருவருமாக எட்டு பேருக்கே தொற்று உறுதியானது.
இவர்கள் சுகாதாரப் பாதுகாப்புடன் மாத்தறை, கம்புறுகம மற்றும் ஹம்பாந்தோட்டை தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்கபட்டதுடன், இதுவரையில் பொகவந்தலாவ சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் பகுதியில் 55 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.








