கர்ப்பிணி தாய்மாருக்கு எரிபொருள் பெற்றுக்கொடுப்பதற்கு முயற்சி: றூபவதி கேதீஸ்வரன்
விசேட சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் உள்ளிட்ட பிற மாவட்டங்களிற்கு செல்லும் கர்ப்பிணி தாய்மாருக்கு எரிபொருள் பெற்றுக்கொடுப்பதற்கு முயற்சித்து வருவதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் தற்பொழுது உள்ள நிலை தொடர்பில் ஊடகவியலாளர்கள் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
உணவு பாதுகாப்பு என்ற விடயத்தில் போஷாக்கான உணவை பயிரிடல் மற்றும் போஷாக்கான உணவை பிள்ளைகளிற்கு வழங்குதல் உள்ளிட்ட விடயங்களும் அடங்குகின்றன.
அதற்கமைவாகவே வீட்டுத்தோட்டத்தினை மேற்கொள்ளுமாறு மக்களிடம் நாங்கள் கோரிக்கை விடுத்திருந்தோம். இந்த வேலைத்திட்டத்திற்காக மருத்துவ பாதுக்களையும் நாங்கள் உள்வாங்கியுள்ளோம்.
விசேட போஷாக்கு திட்டம்
அவர்கள் ஊடாக கர்ப்பிணி தாய்மார் மற்றும் போஷாக்கு குறைந்த பிள்ளைகளை கொண்ட குடும்பங்களில் வீட்டுதோட்டம் உள்ளிட்ட விடயங்கள் ஊடாக போஷாக்கை மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
இதேவேளை நாங்கள் கைவிடப்பட்ட நிலங்களில் விவசாயம் மேற்கொள்ளும் திட்டத்தினையும் நாங்கள் முன்னெடுத்திருக்கின்றோம். அதன் ஊடாக போசாக்கான உணவுகளான தாணிய வகைகளையும் மேற்கொள்வதற்கு அது வழிவகுக்கும்.
மாவட்டத்தைப் பொறுத்தவரையில் சிறிய அளவிலான திட்டங்களை நாங்கள் முன்னெடுத்து வருகின்றோம். அதேவேளை மக்களிற்கான போஷாக்கு எனும் திட்டம் அரசாங்கத்தினால் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டும்.
அதேவேளை கர்ப்பிணி தாய்மாருக்கு மாதாந்தம் 2000 ருபா வழங்கும் செயற்திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கஷ்டமான நிலை மற்றும் விசேட சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் உள்ளிட்ட பிற மாவட்டங்களிற்கு செல்லும் கர்ப்பிணி தாய்மாருக்காக எரிபொருள் பெற்றுக்கொடுப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றோம்.
ஏனையவர்கள் தமது பிரதேசத்தில் உள்ள மருத்துவ மாதுக்களின் உதவியுடன் அருகில் உள்ள சிகிச்சை நிலையங்களிற்கு சென்று சிகிச்சை பெறவும், அல்லது அவர்களிற்கு போக்குவரத்துக்காக நோயாளர் காவு வண்டியை பயன்படுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு அழைப்பு
மாவட்டத்தில் உணவு தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கைவிடப்பட்ட அல்லது பராமரிப்பற்ற காணிகளில் விவசாயம் செய்ய முன்வரும் விவசாயிகளை நாம் வரவேற்கின்றோம்.
அவர்களிற்கு தேவையான விதை தானியம் உள்ளிட்டவற்றை வழங்க சர்வதேச மற்றும் உள்ளுர் நிறுவனங்கள் தயாராக உள்ளன.
எமது மாவட்டத்திற்கான உணவு தேவையை பூர்த்தி செய்வதற்கு உள்ளுர் உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.
அதற்காக விவசாயிகள் முன்வர வேண்டும் எனவும், அதற்காக உதவ தயாராக இருக்கின்றோம்” என மாவட் அரசாங்க அதிபர் அழைப்பு விடுத்துள்ளார்.



