இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்த சீனா வழங்கிய உறுதி: பாலித கொஹொன
பீய்ஜிங்கில் உள்ள இலங்கைத் தூதரகம், சீனாவில், இலங்கையின் சுற்றுலாத் துறையைத் தொடர்ந்து மேம்படுத்துவதற்கான அதன் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
இதன்படி, சீனப் பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர், ஒரு மில்லியன் சீன சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வர இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுற்றுலாத் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில், தூதுவர் பாலித கொஹொனா, பீய்ஜிங் ஸ்பிரிங் டிரவல் சேர்வீஸ் நிறுவன பொது மேலாளர் யாங் யாங்கை நவம்பர் 16ஆம் திகதி அன்று சந்தித்துள்ளார்.
வணிக வருவாய்
இதன்போது, சீன சுற்றுலா சந்தையில், விருப்பமான இடமாக இலங்கையை நிலைநிறுத்துவதற்கான அனைத்து வழிகளையும் தூதரகம் ஆராய்ந்து வருவதாக தூதுவர் கொஹொன தெரிவித்துள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டில் ஸ்பிரிங் டிரவலின் ஆண்டு வணிக வருவாய் 3.5 பில்லியன் டொலர்களாகும். அத்துடன் தொற்றுநோய்க்கு முன்னர் இலங்கைக்கு பல குழு விஜயங்களை ஏற்பாடு செய்திருந்தது.
சீனக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படல்
இந்த நிறுவனம், 110 விமானங்களுடன் இயங்குகிறது.
இதேவேளை, சீனச் சுற்றுலாப் பயணிகளிடையே இலங்கையைப் பற்றிய விழிப்புணர்வை
ஏற்படுத்துவதற்கு தூதரகம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும்,
இதன் மூலம் சீனக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டவுடன் குறைந்தது ஒரு மில்லியன்
சீன சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு ஈர்க்கும் இலக்கை அடைய உதவுவதாகவும்,
தூதுவர் பாலித கொஹன தெரிவித்துள்ளார்.