நாடு பாரிய வீழ்ச்சி நோக்கி நகர்கின்றதா! நிபுணரின் எச்சரிக்கை
நாடு பாரிய பொருளாதார வீழ்ச்சி நோக்கி நகரும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் பொருளாதார மறுசீரமைப்புக்கள் மற்றும் எரிபொருள் விலை திருத்தங்கள் மேற்கொள்ளப்படாவிட்டால் மீண்டும் நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடி நிலை ஏற்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
தரவு ஆய்வாளர் தனனாத் பெர்னாண்டே இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார்.

உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் 2022ம் ஆண்டில் இலங்கை எதிர்நோக்கிய அதேவிதமான பொருளாதார நெருக்கடி நிலை உருவாகும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
2021 மற்றும் 2022ம் ஆண்டுகளில் விலை திருத்தம் மேற்கொள்ளப்படாத காரணத்தினால் எரிபொருள் நுகர்வு வெகுவாக அதிகரித்தது என குறிப்பிட்டுள்ளார்.
அந்த நிலைமை இந்த ஆண்டிலும் காண முடிவதாக அவர் தெரிவித்துள்ளார். 2025ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டில் பெற்றோல் மற்றும் டீசலின் நுகர்வு அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஒரு லீற்றர் பெற்றோலில் 113 ரூபாவும், ஒரு லீற்றர் டீசலில் 238 ரூபாவும் நட்டத்தை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்துள்ளார்.
இந்த நட்டமானது இறுதியில் இலங்கை மின்சாரசபையை பாதிக்கும் எனவும் இறுதியில் இலங்கை மற்றும் மக்கள் வங்கிகளில் தாக்கத்தைச் செலுத்தி ஒட்டுமொத்த வங்கிக் கட்டமைப்பினையும் பாதிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த 2021 மற்றும் 2022ம் ஆண்டுகளில் இந்த நிலைமையே ஏற்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத்தில் உலக சந்தையில் எரிபொருள் விலை திடீரென பாரியளவில் அதிகரித்தால் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி அல்லது எரிபொருளுக்கான வரிசை மீளவும் ஏற்படக்கூடிய அபாய நிலை காணப்படுவதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உலக சந்தை விலைகளுக்கு ஏற்ற வகையில் இலங்கையில் எரிபொருள் விலை திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் வறிய மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டுமெனவும் பரிந்துரை செய்துள்ளார்.
உரிய நேரத்தில் உரிய முடிவுகள் எட்டப்படாவிட்டால் 2022ம் ஆண்டில் நாடு எதிர்நோக்கிய பாரிய பொருளாதார நெருக்கடி நிலைமை மீண்டும் ஏற்படக் கூடிய அபாயம் காணப்படுவதாக தனனாத் பெர்னாண்டோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.