இலங்கையில் வீடுகளில் சமையலறைகளில் எதிரொலிக்கும் அரசின் சாதனை
இலங்கையில் உணவு பொருட்களின் விலை அதிகரித்துள்ளமைக்கு எதிர்ப்பு வெளியிட்டு மத்திய கொழும்பு பெண்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று பிற்பகல் வீதி ஓரத்தில் பால் சோறு சமைத்து சாப்பிட்டு, எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். வீதியில் சென்ற மக்களுக்கும் பால் சோறு வழங்கியுள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்ணொருவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில்,
“நாட்டில் அனைத்து பொருட்களுக்கும் விலை அதிகரித்துள்ளது. சமையலறைக்கு சென்றால் சமைப்பதற்கு ஒன்றுமே இல்லை. அரசாங்கத்தின் விலையேற்றத்தை சமையலறையில் உள்ள பெண்களே உணர வேண்டியுள்ளது.
தற்போது விலையை அதிகரித்துவிட்டு தேர்தலின் போது விலை குறைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல் ஒன்று கிடைத்துள்ளது. ஏன் இவ்வளவு மோசமான செயலில் இந்த அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
அரசாங்கத்தை நிர்வகிக்க முடியவில்லை என்றால் ஜனாதிபதி தயவு செய்து வீட்டிற்கு சென்று விடுங்கள்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.