கொங்கோவில் தீவிரமடையும் எபோலா தொற்று - சுகாதாரத் தொழிலாளர்களை இலக்கு வைத்து புதிய தீட்டம்
கொங்கோ ஜனநாயகக் குடியரசில் மிக வேகமாகப் பரவி வரும் எபோலா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அங்குள்ள சுகாதாரத் தொழிலாளர்களுக்குத் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை நேற்றுமுன் தினம்(19.09.2026) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி வழங்கும் திட்டம்
வடகிழக்கு கொங்கோவின் இதுரி மாகாணத்தின் தலைநகரான புனியாவில் இந்தத் தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதாக மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் கெபி கசோங்கோ முலும்பா தெரிவித்துள்ளார்.
எபோலா தொற்றைக் கட்டுப்படுத்தும் களப்பணியில் நேரடியாக ஈடுபட்டுள்ள சுகாதாரத் தொழிலாளர்கள் அதிக ஆபத்தை எதிர்கொள்வதால் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகின்றது.

உலக சுகாதார நிறுவனம் (WHO) மற்றும் எல்லையற்ற மருத்துவர்கள் அமைப்பு (MSF) ஆகியவற்றின் ஆதரவுடன் முன்னெடுக்கப்படும் இந்த திட்டத்தின் கீழ், சுமார் 50,000 முன்னணிச் சுகாதாரப் பணியாளர்களுக்கு “எர்வேபோ” தடுப்பூசி வழங்கப்படவுள்ளன.
3 ஆயிரம் பேர் உயிரிழப்பு
தற்போது பரவி வரும் “புண்டிக்புயோ” வகை எபோலா வைரஸுக்கு எதிராகப் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், பொதுவான ஜைர் எபோலா வைரஸைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படும் எர்வேபோ தடுப்பூசி, பரிசோதனை அடிப்படையில் இவர்களுக்கு வழங்கப்படுகின்றன.

இதன் செயல்திறன் குறித்து சுமார் 20,000 பேரிடம் ஓராண்டு காலம் கண்காணிக்கப்படவுள்ளன.
கடந்த மே மாதம் முதல் பரவத் தொடங்கிய இந்த எபோலா தொற்றினால் இதுவரை 7,541 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், குறைந்தது 3,639 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 1,823 பேர் வரை சிகிச்சையின் பின்னர் குணமடைந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகளின் தரவுகள் தெரிவிக்கின்றன.