உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் விசாரணை தொடர்பில் உறுதி மொழியை மீறிய ரணில்: வெளியான தகவல்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள இலங்கை அரசாங்கம், இதுவரை பிரித்தானிய பொலிஸ் அதிகாரிகளிடம் உதவியை நாடவில்லை என ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரி ஒருவரும் உறுதிப்படுத்தியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை பிரித்தானிய பொலிஸ் அதிகாரிகளின் ஆதரவுடன் மேற்கொள்ள முடியும் என நம்புவதாக அப்போதைய பிரதமரும், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியிருந்தார்.
இந்நிலையில், இலங்கை அரசாங்கம், இதுவரை பிரித்தானிய பொலிஸ் அதிகாரிகளிடம் அத்தகைய உதவியை நாடவில்லை. அவர் இந்த கருத்தை நாடாளுமன்றில் கூறி இப்போது ஒரு மாதம் கடந்துள்ளது.
இந்த சம்பவங்கள் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்வதில் அரசாங்கம் ஆர்வம் காட்டினால், உத்தியோகபூர்வ கோரிக்கையை பிரித்தானிய பொலிஸ் அதிகாரிகளிடம் விடுக்க வேண்டும்.
கோரிக்கையை முன்வைக்கும் முக்கிய நிறுவனங்கள்
எனினும் அத்தகைய கோரிக்கையை முன்வைக்கும் அதிகாரங்களை கொண்ட, முக்கிய நிறுவனங்களான ஜனாதிபதி செயலகம், பாதுகாப்பு அமைச்சு, அல்லது பொது பாதுகாப்பு அமைச்சகம் இதுவரை எந்த கோரிக்கையையும் முன்வைக்கவில்லை.
அத்துடன் தனக்கு தெரிந்த வகையில், அது தொடர்பில் கலந்துரையாடல் எதுவும் இடம்பெறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் பாதுகாப்பு அமைச்சின் ஊடாக இவ்வாறான கோரிக்கை விடுக்கப்படவில்லை என்றும், இந்த முனைப்பு இராஜதந்திர மட்டத்தில் இது செய்யப்பட வேண்டும் என்றும் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பதவி விலகலைத் தொடர்ந்து கடந்த ஜூலை 18ஆம் திகதி பதில் ஜனாதிபதியாக பதவி வகித்து அறிக்கை வெளியிட்ட விக்ரமசிங்க, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணையை நிறைவு செய்வதற்கு பிரித்தானிய பொலிஸ் அதிகாரிகளின் உதவியைப் பெறத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்திருந்தார்.
இனியும் தாமதிக்காமல் இந்த விஷயத்தை இறுதி செய்ய வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
கத்தோலிக்க திருச்சபை வெளியிட்ட கருத்து
எனினும் , ரணில் விக்ரமசிங்க இந்த அறிக்கையை விடுத்த சில மணிநேரங்களுக்குப் பிறகு, கத்தோலிக்க திருச்சபை, தமது கருத்தை வெளியிட்டிருந்தது.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களில் இறந்த மக்களின் "இரத்தத்திலும் சதையிலும்" மற்றும் "துக்கத்திலும் கண்ணீரிலும்" ஜனாதிபதி அதிகாரத்தைப் பெற, ரணில் முயற்சிக்கிறார் என்று திருச்சபை குற்றம் சுமத்தியிருந்தது.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களின் போது விக்ரமசிங்க பிரதமராக இருந்ததாகவும், பிரித்தானியா காவல்துறை அதிகாரிகளின் மூலம் சுதந்திரமான விசாரணை நடத்த, அவருக்கு போதிய நேரமும் வாய்ப்பும் இருந்ததை திருச்சபை நினைவு கூர்ந்திருந்தது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள்
2019, 21 ஏப்ரல் அன்று, மூன்று தேவாலயங்கள் (கடுவாப்பிட்டி புனித செபஸ்டியன் தேவாலயம், கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், மற்றும் மட்டக்களப்பில் உள்ள சியோன் தேவாலயம்) மற்றும் கொழும்பில் மூன்று சொகுசு ஹோட்டல்கள் (சினமன் கிராண்ட், தி கிங்ஸ்பரி மற்றும் தி. ஷங்ரி-லா) தொடர்ச்சியான ஒருங்கிணைந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களுக்கு உள்ளாகின.
அத்துடன் அன்று, தெமட்டகொடையில் உள்ள ஒரு வீடு மற்றும் தெஹிவளையில் உள்ள தங்குமிடம் ஆகியவற்றில் மேலும் இரண்டு குண்டு வெடிப்புகள் இடம்பெற்றன. இந்த குண்டுவெடிப்புகளில் குறைந்தது 45 வெளிநாட்டினர் உட்பட மொத்தம் 267 பேர் கொல்லப்பட்டனர், குறைந்தது 500 பேர் காயமடைந்தனர்.
தாக்குதல்களில் ஈடுபட்ட எட்டு தற்கொலை குண்டுதாரிகளும் கொல்லப்பட்டவர்களில் அடங்குவர். இந்த தாக்குதல்களில் ஈடுபட்டவர்கள், ஷங்ரிலா ஹோட்டலில் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்திய சஹ்ரான் ஹாஷிம் என்ற மொஹமட் காசிம் மொஹமட் சஹ்ரானால் நிறுவப்பட்ட தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பில் தொடர்புடையவர்களாவர்.
கோட்டாபயவிடம் எந்த நிபந்தனையும் இன்றி பதவியை வாங்கிய ரணில்! முக்கிய தகவல்களை வெளியிட்ட சனத் நிஷாந்த |

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
