2017 முதல் தாக்குதல் திட்டம்! பிள்ளையான் - சுரேஷ் சாலே குறித்து அரசாங்கம் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்கள்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு இரு வருடங்களுக்கு முன்பிருந்தே சதித்திட்டம் தீட்டப்பட்டு வந்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் வைத்து இன்றைய தினம் (09.04.2026) உரையாற்றும் போதே அவர் இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
அவர் மேலும் தெரிவிக்கையில், 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலானது ஒரு தனித்த சம்பவமல்ல.
அது 2017ஆம் ஆண்டு முதல் முன்னெடுக்கப்பட்ட ஒரு சதித்திட்டம் என்பது தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.
சிவனேசத்துரை சந்திரகாந்தன் என்ற பிள்ளையனுக்கு ஈஸ்டர் தாக்குதல் குறித்து முன்னரே தெரிந்திருந்தது என்ற உண்மைகள் வெளிப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

சஹ்ரான் ஹாசிமை மேலிடத்திலிருந்து இயக்கிய ஒரு நபர் மற்றும் ஒரு குழு இருந்ததற்கான ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் வலியுறுத்தினார்.
வவுனியா பொலிஸ் அதிகாரிகள் கொலை தொடர்பான விசாரணை முறையாக நடத்தப்பட்டிருந்தால், ஈஸ்டர் தாக்குதலைத் தடுத்திருக்க முடியும் என்றும் அவர் கூறினார்.
மேலும், சதித்திட்டம் தீட்டியது மற்றும் ஈஸ்டர் தாக்குதலுக்கு உடந்தையாக இருந்தது ஆகிய சந்தேகத்தின் பேரில் சுரேஷ் சாலே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.