உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் புதிய விசாரணைகள்
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் புதிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளில் பாரியளவு குறைபாடுகள் காணப்படுவதனால் புதிய விசாரணைக்குழு மூலம் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மேலும், இந்த தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகளை நடத்துமாறு பயங்கரவாத விசாரணைப் பிரிவு மற்றும் இரகசிய பொலிஸாருக்கு அரசாங்கம் பணிப்புரை விடுத்துள்ளது.
தாக்குதலை நடத்திய சஹ்ரான் ஹாசீம் என்பவர் ஹைடர் அலி என்பவருடன் ஜப்பானில் மூன்று மாதங்களை கழித்துள்ளதாகவும், துருக்கியில் ஆயுத பயிற்சி பெற்றுக் கொண்டுள்ளதாகவும் தெரியவந்துள்ள போதிலும் இது குறித்து விசாரணை நடத்தப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் தமது கடமைகளை தவறவிட்ட ஒன்பது பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அந்த தெற்கு ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.