கடமையுணர்வு தவறும் அதிகாரிகள் தொடர்பில் மேலிடங்களுக்கு அறிவித்தல் கொடுங்கள்: நஸீர் அஹமட் கோரிக்கை(Photos)
கடமையுணர்வு தவறும் அதிகாரிகளைக் கவனித்து அதுபற்றி மேலிடங்களுக்கு அறிவிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட்(Nazeer Ahamad) தெரிவித்துள்ளார்.
ஏறாவூர் நகர, பிரதேச செயலகப் பிரிவில் ஆடு வளர்ப்பில் ஆர்வமுள்ள பயனாளிகளுக்கு ஆடுகள் வழங்கும் நிகழ்வு இன்று(21) ஏறாவூர் நகர, பிரதேச செயலாளர் வி. நிஹாறா தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளான 41 ஆடு வளர்ப்பாளர்களுக்கு தலா 30 ஆயிரம் ரூபாய் பெறுமதியான ஆடுகள் வழங்கப்பட்டன.
அங்கு பயனாளிகளுக்கு ஆடுகளை வழங்கி வைத்துத் தொடர்ந்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட்,
முன்பு நடைமுறைப்படுத்தப்பட்ட வாழ்வாதாரத் திட்டங்களை விட இது சிறப்பானது. ஒருங்கிணைந்த பாரிய வேலைத்திட்டமாக இது அமுலாக்கப்படுவதால் இதன் பலாபலன் 2024 ஆம் ஆண்டளவில் தெளிவாகத் தெரிய வரும் வழமையாக இதுவரை அமுல்படுத்தப்பட்ட திட்டங்களிலோ பயனாளிகள் அதனை நன்கு பயன்படுத்திக் கொள்ளவில்லை என்கின்ற குறைபாடும் இருந்து வருகின்றது.
அதேவேளை அதிகாரிகள் தங்களுடைய அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்கின்ற போக்கும் தங்களது பணிகளைச் சரியாகச் செய்யாத நிலைமையும் காணப்படுகின்றது.
அதிகாரிகள் மக்களுடன் சரியான முறையில் இணைப்பாக்கம் செய்வதில்லை. பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் தங்களுக்கு விரும்பியவர்களுக்கும் விரும்பிய பிரதேசங்களுக்கும் விரும்பிய இனத்திற்கும் பணி செய்யும் பிற்போக்குத் தனமான நடவடிக்கைகள் எமது பிரதேசங்களில் இடம்பெற்று வருகிறது.
ஆகையினாலே பயனாளிகளான பொதுமக்கள் இந்த விடயத்திலே கவனமாக இருக்க வேண்டும். கடமையுணர்வு தவறும் அதிகாரிகளைக் கவனித்து அதுபற்றி மேலிடங்களுக்கு அறிவிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
பயனாளிகளுக்கு ஆடுகள் வழங்கும் இந்நிகழ்வில் பிரதேச உதவிச் செயலாளர் ஏ.சி.
அஹமட் அப்கர் திட்டமிடல் உதவிப் பணிப்பாளர் எம். ஹன்சுல் சிஹானா கணக்காளர்
தர்மினி வினோதன் உட்பட இன்னும் பல அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.




