பொது மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக நிறுத்தப்பட்ட குட்டியாராம விகாரை காணி அளவீடு பணிகள்
திருகோணமலை, 64ம் கட்டை பகுதியில் உள்ள குட்டியாராம விகாரையை சுற்றி நில அளவையாளர்கள் அளவீடு செய்ய முற்பட்ட போது பொது மக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 64ம் கட்டை பகுதியில் குட்டியாராம விகாரை மலை உச்சியில் அமைந்துள்ளதுடன், அதனைச்சுற்றி மக்களுடைய காணிகள் இருப்பதாகவும்,விகாரைக்கு 300 ஏக்கர் காணி தேவைப்படுவதாக கூறி வருவதாகவும் மக்கள் குறிப்பிடுகின்றனர்.
இருந்தபோதிலும் குட்டியாராம விகாரையை சுற்றியுள்ள மலைப்பகுதியை அளவீடு செய்வதற்கு மக்கள் தங்களது விருப்பத்தை தெரியப்படுத்திருந்தபோதிலும், மக்கள் குடியிருந்து வரும் காணிகளையும் சுற்றி அளவீடு செய்ய முயற்சிப்பதாகவும், இதனால் தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து குறித்த இடத்திற்கு அளவீடு செய்ய வருகை தந்த நில அளவையாளர்கள் மீண்டும் திரும்பி சென்றதாகவும்,சம்பவ இடத்திற்கு சென்று பொலிஸார் பார்வையிட்டதாகவும் தெரியவருகின்றது.
