அம்பாறையில் கைதான போதைப்பொருள் வியாபாரிக்கு தடுப்புக் காவல் உத்தரவு
அதிகளவான போதைப் பொருட்களை இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு விநியோகித்த குற்றத்திற்காக கைதுச் செய்யப்பட்ட பிரபல போதைப்பொருள் வியாபாரியை, எதிர்வரும் ஜனவரி மாதம் 8ஆம் திகதி வரை 5 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை புறநகர் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை(2.1.2026) கைது செய்யப்பட்ட நபருக்கே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கைது நடவடிக்கை
கல்முனை விசேட அதிரடிப்படையினர் மற்றும் பெரிய நீலாவணை பொலிஸார் இணைந்து மேற்கொண்ட விசேட தேடுதலில், சாய்ந்தமருது பகுதியை சேர்ந்த போதைப்பொருள் வியாபாரி 30 கிராம் ஹெரோயின் மற்றும் 10 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, குறித்த நபர், இதற்கு முன்னரும் போதைப்பொருள் குற்றச்சாட்டின் அடிப்படையில் சாய்ந்தமருது பொதுச்சந்தை மாடியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.
அண்மைக்காலமாக இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு அதிகளவான போதைப் பொருட்களை மருதமுனை பகுதியில் விநியோகிப்பதாக கிடைத்த இரகசிய தகவல் அடிப்படையில் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
இவ்வாறு கைதான 44 வயதுடைய சந்தேக நபரை சனிக்கிழமை(3.01.2026) கல்முனை நீதிமன்ற பதில் நீதிவான் அப்துல் ரசீட் முஹம்மது கலீல் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, எதிர்வரும் ஜனவரி மாதம் 8ஆம் திகதி வரை 5 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்துடன் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரை D.C.D.B என அழைக்கப்படும் அம்பாறை மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவினர் பொறுப்பேற்று, மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், அம்பாறை மாவட்டத்தில் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் போதைப்பொருளுடன் தொடர்புடையவர்களை கண்டறிவதற்கான போதைப்பொருள் ஒழிப்பு கண்காணிப்பு குழுவொன்று உருவாக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின் ஆலோசனைக்கு அமைய பெரிய நீலாவணை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும், பொலிஸ் பரிசோதகருமான பி.கஜேந்திரன் வழிகாட்டுதலில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
குணசேகரன் ஜாமினுக்கு வந்த சிக்கல், செக் வைத்தது யார் தெரியுமா?... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
உதவி செய்த மீனாவையே பிரச்சனையில் சிக்க வைத்த மயில், என்ன இப்படி பண்ணிட்டாங்க... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
திடீரென கண்ணீர்விட்டு அழுத சோழன், அதைப்பார்த்த நிலா செய்த விஷயம்.. அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam