டக்ளஸுடன் இணையும் சுமந்திரன் - மணிவண்ணன்
இலங்கை தமிழ் அரசு கட்சியின் செயலாளர் எம்.ஏ.சுமந்திரனின் வழிகாட்டல், பணிப்புரை - அனுசரனையில் தான் அந்த கட்சி தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், சிறிதர் தியேட்டருக்கு வந்து, தமது கட்சிக்கு ஆதரவு கோரினார் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் (ஈ.பி.டி.பி) செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், "இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் நேற்று ஈ.பி.டி.பி தலைமையகமான சிறிதர் தியேட்டருக்கு சென்று, உள்ளூராட்சி சபைகளில் ஈ.பி.டி.பியுடன் கூட்டாக இணைந்து ஆட்சியைப் பிடிப்பது பற்றி பேசினார்.
இந்த பேச்சின் போது, தமிழரசு, ஈ.பி.டி.பி கூட்டில், வி.மணிவண்ணன் தரப்பும் இணைய விரும்புவதையும் சீ.வீ.கே சுட்டிக்காட்டியிருந்தார். சீ.வீ.கே, சிறிதர் தியேட்டர் சென்றது தமிழரசு கட்சி உறுப்பினர்களையும், ஆதரவாளர்களையும் கொதிப்படைய வைத்தது. கட்சித்தலைமையை அவர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
சந்திப்பு குறித்த விமர்சனங்கள்..
இந்த நிலையில், இன்று (6) சுமந்திரன் வெளியிட்ட காணொளியில், “சிறிதர் தியேட்டர் சென்றது தொடர்பான விமர்சனங்களையடுத்து கட்சித்தலைவருடன் பேசினேன்.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் அரசியல்குழு கூட்டத்தில்- உள்ளூராட்சிசபைகளில் அதிக ஆசனங்களை பெற்ற தமிழ் கட்சி அந்தந்த பகுதிகளில் ஆட்சியமைக்க வேண்டும்.
தமிழரசு கட்சி அதிக ஆசனம் பெற்ற சபைகளில் ஆட்சியமைக்க ஏனைய கட்சிகள் உதவ வேண்டும். வேறொரு தமிழ் கட்சி அதிக ஆசனம் பெற்ற சபையில் ஆட்சியமைக்க தமிழரசு கட்சி உதவும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.
இந்த தீர்மானத்தையே டக்ளஸ் தேவானந்தாவிடம் தெரிவித்தேன் என கட்சித்தலைவர் சீ.வீ.கே என்னிடம் தெரிவித்தார்“ என குறிப்பிட்டிருந்தார்.
இதேவேளை, இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய தமிழரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் , "2001 இல் யாழ். தீவகத்தில் தமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராசாவை படுகொலை செய்ய, இராணுவ ஆதரவுக்குழுவான டக்ளஸ் தலைமையிலான ஈ.பி.டி.பி முயன்றது என குறிப்பிட்டார். இந்த விடயங்கள் தொடர்பில் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்தை அறிய தமிழ் பக்கம் இன்று அவரை தொடர்பு கொண்டது.
எம்.ஏ.சுமந்திரன் வெளியிட்ட காணொளி கருத்தை டக்ளஸ் தேவானந்தா மறுத்தார். தமிழரசுகட்சியின் அரசியல்குழு தீர்மானம் எதையும் சீ.வீ.கே தன்னிடம் தெரிவிக்கவில்லை என்றார். மற்றொரு கட்சியின் அரசியல்குழு தீர்மானம் இன்னொரு கட்சியை எப்படி கட்டுப்படுத்தும் என கேள்வியெழுப்பினார்.” சீ.வீ.கே என்னிடம் தனது கட்சி தீர்மானம் எதையும் கூறவில்லை.
இலங்கை தமிழ் அரசு கட்சி உள்ளூராட்சிசபைகளில் அதிகாரத்தை கைப்பற்ற நாமும் ஆதரவளிக்க வேண்டுமென்றார். எங்களுடன் மணிவண்ணனும் இணைந்து செயற்படுவார் என கூறினார்“ என்று டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
உட்கட்சி விவகாரம்
அதேவேளை, “இலங்கை தமிழ் அரசு கட்சி, சீ.வீ.கே.சிவஞானம் என்னிடம் உதவி கேட்பது இது முதல்முறையல்ல. கடந்த உள்ளூராட்சி அதிகாரசபை தவிசாளர் தெரிவு சமயத்திலும் சீ.வீ.கே.சிவஞானம் என்னிடம் நல்லூரில் தனது ஆளான தியாகமூர்த்தி வெற்றியீட்ட ஆதரவளிக்குமாறு கேட்டிருந்தார்.
பிற சபைகளிலும் தமிழரசு கட்சியின் பிற பிரமுகர்கள் பேசியிருந்தனர். கடந்த முறை அவர்களை நாம் ஆதரித்திருந்தோம்“ டக்ளஸ் என்றார்.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் கருத்து தொடர்பில் பதிலளித்த போது, நாரந்தனை சம்பவம் பற்றிய தனது தரப்பு கருத்துக்களை தெரிவித்தார்.
இந்த விவகாரம் மேல்முறையீட்டில் இருப்பதால் விபரமாக பேச விரும்பவில்லையென்றார். “சிறீதரனுக்கு கட்சிக்குள் பிரச்சினையுள்ளது. சிறீதரன், சுமந்திரன் அணிகள் மோதிக்கொள்கிறார்கள்.
மேலும், அவர்களின் பிரச்சினை உட்கட்சி பிரச்சினை. கட்சி செயலாளர் சுமந்திரனின் வழிகாட்டல், அனுசரணை, பணிப்புரையின் அடிப்படையில் தலைவர் எமது அலுவலகத்துக்கு வந்திருப்பார். தெரியாமல் வந்திருக்க முடியாதுதானே. எம்மிடம் கட்சித்தலைவர் ஆதரவு கோரினார். இதற்கு சிறீதரன் ஆதரவா, சுமந்திரன் ஆதரவா என நாம் பார்த்துக்கொண்டிருக்க முடியாதுதானே“ என டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம் News Lankasri
