மன்னார் காற்றலை விடயத்தில் அநுர இரட்டை நிலைப்பாடு: சபா குகதாஸ் குற்றச்சாட்டு!
மன்னார் காற்றலை விடயத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இரட்டை நிலைப்பாட்டில் உள்ளதாக வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னார் மாவட்ட போராட்டத் தரப்பின் பிரதிநிதிகளை ஜனாதிபதி அநுர சந்தித்த போது அநுர மேற்கொண்ட உரையாடல் சந்தித்தவர்களுக்கு சந்தேகத்தையும் இரட்டை நிலைப்பாட்டையும் உணர வைத்தது.
அத்தோடு கனியமணல் அகழ்வு மற்றும் காற்றலை மின்சார திட்டங்களை தடுக்க ஒரு மாத அவகாசம் கேட்டார் அநுர.
காற்றலை விடயம்
திட்டங்கள் தொடர்பாக அதன் சாதக பாதகங்களை ஆராய ஒரு குழுவை நியமிப்பதாகவும் குழுவின் அறிக்கையின் பின்னர் முடிவுகளை எடுப்பதாகவும் ஜனாதிபதி அநுர கூறியுள்ளார்.
போராட்டக் குழுவின் பிரதிநிதிகளை சந்தித்த சில தினங்களில் மன்னார் மாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகையை சந்தித்த போது பிரச்சினைக்குரிய திட்டங்களை உடனடியாக நிறுத்துவதாக ஆயரிடம் கூறியதாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.
இரட்டை நிலைப்பாடு
ஒரு மாத அவகாசம் கேட்ட ஜனாதிபதி அநுர ஒரு சில நாட்களில் உடனடியாக நிறுத்துவதாக கூறியமை முரண்பட்ட இரட்டை நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.
காற்றலை மின்சாரத்தை அமைப்பதற்கான உபகரணங்கள் அடங்கிய நூற்றுக்கு அதிகமான பார ஊர்திகள் மன்னார் மாவட்டத்துக்குள் வந்துள்ள நிலையில் ஐனாதிபதியின் முன் பின் முரணான உரையாடல் அவரது இரட்டை நிலைப்பாட்டையே உறுதி செய்கிறது என தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




