நாடளாவிய ரீதியில் ஆயிரக்கணக்கானோர் கைது!
விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, நாடளாவிய ரீதியில் நேற்று வெள்ளிக்கிழமை (22) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 5,077 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சுற்றிவளைப்பு நடவடிக்கை
பொலிஸ் அதிகாரிகள், இராணுவ வீரர்கள், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் கடற்படையினர் ஆகியோர் இணைந்து இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் ஆதாரங்களுடன் 21 பேரும், சந்தேகத்தின் பேரில் 724 பேரும், பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 236 பேரும், திறந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 189 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மதுபோதையில் வாகனங்களை செலுத்தியமை தொடர்பில் 67 சாரதிகளும், கவனக்குறைவாக வாகனங்களை செலுத்தியமை தொடர்பில் 23 சாரதிகளும், ஏனைய போக்குவரத்து விதிமுறைகளை மீறியமை தொடர்பில் 3817 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.




