சர்வதேச வீட்டுப்பணியாளர்கள் தினத்தில் கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்த வீட்டுப்பணியாளர்கள் (Photos)
எமது நாட்டில் நாடாளவிய ரீதியில் வீடுகளில் பணிபுரியும் வீட்டுவேலை பணியாளர்களின் தொழில் உரிமைகளை உறுதி செய்யக்கோரியும் விலையுயர்விற்கு எதிர்ப்பு தெரிவித்தும் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச வீட்டுப் பணியாளர்கள் தினமான இன்று இப் போராட்டம் ஒன்று ஹட்டனில் இடம்பெற்றுள்ளது.
முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள்
வீடுகளில் பணிபுரியும் வீட்டு வேலை பணியாளர்கள் தங்களின் உரிமைகளைச் சட்டமாக்குமாறும், தொழில் பாதுகாப்பு பெற்றுக்கொடுக்குமாறும், சர்வதேச தொழில் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சி 189 2011 உருவாக்கப்பட்ட சாசனத்தினை நடைமுறைப்படுத்துமாறும், பொருட்களின் விலை அதிகரிப்புக்கேற்ப சம்பளம் பெற்றுக்கொடுக்க வேண்டுமென்றும், துஷ்பிரயோகம், துன்புறுத்தல்கள் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு உரிய சட்டங்களைக் கொண்டு வர வேண்டுமென்றும் வலியுறுத்தியே குறித்த கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.
போராட்டக்காரர்கள் ஹட்டன் மல்லியைப்பூ சந்தியிலிருந்து ஆரம்பித்து“சகல நுண் கடன்களையும் ரத்தச்செய்”, ”வீட்டுப் பணியாளர்களை விற்பனை செய்வதனை நிறுத்து”, ”வீட்டு வேலை தொழிலாளர்களின் தொழில் உரிமையினை வென்றெடுப்போம்” போன்ற வாசகங்கள் எழுதிய சுலோக அட்டைகளை ஏந்திய வண்ணம் கோசமிட்டு ஹட்டன் நகர் ஊடாக சென்று ஹட்டன் தொழில் திணைக்களம் வரை சென்று மகஜர் ஒன்றினையும் கையளித்துள்ளனர்.
ப்ரொட்டெக்ட் தொழிற்சங்கம் ஒழுங்கு செய்திருந்த குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் சுமார் 200 இற்கும் அதிகமான வீட்டு வேலை தொழிலாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இது குறித்து மாவட்ட அமைப்பாளர் கருப்பையா மைதிலி கருத்து தெரிவிக்கையில்,
”இன்று சர்வதேச பணியாளர்கள் தினம் என்பதனால் நாங்கள் அவர்களின் உரிமைகள் தொடர்பாக ஒரு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளோம்.
இதற்கு முக்கியமான காரணம் என்ன வென்றால் கடந்த வருடம் முன்னாள் தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுடன் பல கலந்துரையாடல்கள் மேற்கொண்டிருந்தோம். அதில் பல கோரிக்கைகளை முன்வைத்திருந்தோம். அதனை அவர் ஏற்றுக்கொண்டிருந்தார்.
அதில் முக்கியமானவையாக ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம், சட்டமூல மறுசீரமைப்பு போன்ற விடயங்களை இந்த வருடத்திற்குள் செய்வதாக அவர் வாக்குறுதி அளித்திருந்தார். அதே நேரம் அவர்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுப்பது தொடர்பாகவும் பல்வேறு விடயங்களுக்கு இணக்கம் தெரிவித்திருந்தார்.
பணியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்
ஆனால் இன்று அந்த விடயங்களுக்கு என்ன நடந்தது என்று கேள்விக்குறியாகவே உள்ளன. இன்று வீடுகளில் வேலை செய்யும் பணியாளர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். அவர்களுக்குத் தொழில் பாதுகாப்பு கிடையாது முறையான சம்பள வழங்கப்படுவதில்லை.
அவர்களின் எந்த ஒரு பிரச்சினைக்கும் உரிய தீர்வு பெற்றுக்கொடுக்கப்படவில்லை. இன்று சுமார் 200 வருடங்களுக்கு மேல் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வீடுகளில் பணியாளர்களாக உள்ளார்கள்.
ஆகவே அவர்களின் தேவைகள் உரிமைகள் மற்றும் அவர்களுக்கு உரிய சட்டங்கள் போன்றவற்றினை தொழில் அமைச்சர் மற்றும் தொழில் ஆணையாளர்கள் ஆகியோர் உடன் கொண்டுவரப்பட வேண்டும் என்பதற்காகக் குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டுள்ளோம்'' இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.










