உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு இன ரீதியாக செயற்படுகிறதா?- இம்ரான் கேள்வி
உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு அரசியல் மயமாக்கப்பட்டு இன ரீதியாக செயற்படுகிறதா என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப்(Imran Maharoof) கேள்வி எழுப்பினார்.
இது குறித்து தொடர்ந்தும் தெரிவித்த அவர்,
உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு அரசியல் மயமாக்கப்பட்டு இன ரீதியாகவும் இயங்குகிறதா என்ற சந்தேகம் நிலவுகிறது குறிப்பாக கிண்ணியா பிரதேச செயலாளராக கடமையாற்றியவர் அண்மையில் எந்தவித காரணமும் இன்றி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
வருடாந்த இடமாற்றத்தில் இது இடம்பெறவில்லை மாவட்ட செயலாளரினாலேயே இவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சில உள்ளூர் அரசியல்வாதிகளின் விருப்பத்துக்கு மாறாக செயற்பட்டமையாலேயே இவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இவ்வாறு இன்று சட்டவிரோத மண் அகழ்வுக்கும் சட்ட விரோத காணி அபகரிப்புக்கும் அனுமதி வழங்கப்படாததால் அரச அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்படுகிறது.
திருகோணமலை மாவட்ட செயலகத்தில் முஸ்லிம் அதிகாரிகள் பணிபுரியும் சந்தர்ப்பங்கள் மறுக்கப்பட்டு வருகின்றன. அங்கு கடமைபுரிந்த மேலதிக அரசாங்க அதிபர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கடந்த இரண்டு மாதங்களாக மாவட்ட செயலகத்தில் திட்டமிடல் பணிப்பாளர் பதவி வெற்றிடமாக உள்ளது.
அப்பதவிக்கு உரிய தகுதிகளை உடைய ஒருவர் உரிய முறைப்படி விண்ணப்பித்தும் அவர் முஸ்லிம் என்ற காரணத்தால் அமைச்சில் அவரது விண்ணப்பம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. குச்சவெளி பிரதேச செயலாளர் பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்ட போது முஸ்லிம் ஒருவர் உரிய முறைப்படி விண்ணப்பித்தபோதும் அவர் முஸ்லிம் என்ற காரணத்தால் அவரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
நான் இந்த இடத்தில் இனவாதம் பேசவில்லை. உரிய தகுதிகளை கொண்டவர்கள் உரிய
பதவிகளுக்கு இன ரீதியான பாகுபாடின்றி நியமிக்கப்பட வேண்டும் என்பதையே நான்
இங்கு கூறுகின்றேன் என குறிப்பிட்டார்.